காவிரி டெல்டா விவசாயிகளுக்காகவும் கஞ்சித் தொட்டிகள் திறப்பு
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வறுமையால் வாடும் நெசவாளர்களுக்காக ஆங்காங்கே கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காகவும் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட ஆரம்பித்துள்ளன.
இலவச வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு நிறுத்தியதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு இப்போது கிடைப்பதில்லை.
இதையடுத்து கடந்த சில நாட்களில் ஏழை நெசவாளர்களுக்காக ஆங்காங்கே கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. பசி, பட்டினியால் வாடும் நெசவாளர்களுக்காக திமுகவினரும் பல்வேறு இடங்களில் கஞ்சித் தொட்டிகளைத் திறந்து வருகின்றனர்.
இந்நிலையில் பருவமழை பொய்த்ததோடு கர்நாடக அரசும் காவிரியில் நீர் திறந்து விட மறுத்து விட்டதால் குறுவை சாகுபடியைச் செய்ய முடியாமல் காவிரி டெல்டா விவசாயிகளும் வறுமையால் வாடி வதங்கி வருகின்றனர்.
குறுவைச் சாகுபடி பாதிக்கப்பட்டதால் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு வேளைச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து பள்ளிவார்மங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்காக இன்று கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. ஏழை விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் பாத்திரங்களில் கஞ்சி பெற்றுச் சென்றனர்.
"குளிக்கத் தண்ணி இல்ல. குடிக்கக் கூடத் தண்ணி இல்ல" என்று கூறிக் கொண்டு ஒரு வயதான பெண் விவசாயி தலையில் அடித்துக் கொண்டு அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.












Click it and Unblock the Notifications