சென்னை: தியேட்டரில் ஈவ் டீசிங் செய்த கல்லூரி மாணவர் தலைவர்
சென்னை:
சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் தியேட்டருக்குப் படம் பார்க்க வந்த இளம் பெண்ணைக் கேலி செய்து அவரைத் தாக்கினார்கள். அவர் கொடுத்த புகாரின் பேரில் மாணவர்கள் சிலரைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு பிரபாகரன் என்பவர் தன் தோழியுடன் படம் பார்க்க சென்றிருந்தார். அதே தியேட்டருக்குப் படம் பார்க்க புதுக் கல்லூரி மாணவர்கள் சங்கத் தலைவர் ருஸ்ஸோ உள்ளிட்ட 50 பேரும் வந்திருந்தனர்.
பிரபாகரனின் தோழியைப் பார்த்து அவர்கள் கேலி செய்தனர். பாட்டுப் பாடி கிண்டலும் செய்துள்ளனர். முதலில் பொறுமையாக இருந்த அந்தப் பெண், பிறகு மாணவர்களைத் தட்டிக் கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கினர். அதைத் தடுக்க வந்த பிரபாகரனையும் அவர்கள் தாக்கினர்.
இதையடுத்து அந்த தியேட்டரில் காவலுக்கு வந்திருந்த இரண்டு போலீசார் விரைந்து வந்து மாணவர்களை விலக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கும் அடி விழுந்தது.
இந்த சம்பவத்தையடுத்து அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்தப் பெண். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இறுதியில் ருஸ்ஸோ உள்ளிட்ட சில மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர். மாணவர் சங்கத் தலைவரே இப்படிக் கீழ்த்தரமாக நடந்து கொண்டது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.