போலீசாரை சோதனையிட்ட மதிமுகவினர்
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டில் சோதனை நடத்த க்யூ பிராஞ்ச் போலீசார் வந்தபோது அவர்களை மதிமுகவினர்முழுமையாக சோதனையிட்ட பின்னரே உள்ளே அனுமதித்தனர். அதே போல போலீசார் சோதனை நடத்தியதை வைகோவின்உதவியாளர் வீடியோ படமாக எடுத்தார்.
காலை 5.30 மணிக்கு வேன்களில் போலீசார் வந்து இறங்கியபோது அவர்களை எதிர்பார்த்து மதிமுக நிர்வாகிகளும் வைகோவின்வழக்கறிஞர்களும் தயாராக உட்கார்ந்திருந்தனர்.
சோதனை நடத்தனும் என்று உள்ளே வந்த அவர்களிடம் முதலில் கோர்ட் உத்தரவை வாங்கி வழக்கறிஞர்கள் படித்துப் பார்த்தனர்.
வீட்டில் பெண்கள் உள்ளனர். அதனால் பெண் போலீஸ் வந்தால் தான் உள்ளே விடுவோம் என வழக்கறிஞர்கள் கூறியபோதுஅதற்கு க்யூ பிராஞ்ச் போலீசார் எதிர்ப்புத் தெரிவிக்க, அப்படியானால் வீட்டுக்குள் நுழைய விட மாட்டோம் என அறிவித்தனர்.
இதனால் வேறு வழி இல்லாமல் பெண் போலீசாரை வரவழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் வந்த போலீசாரை மதிமுகவினர்தடுத்தனர்.
முதலில் உங்களை சோதனையிட வேண்டும். நீங்கள் ஏதாவது போலி ஆவணத்தை செட்-அப் செய்து வீட்டுக்குள் வைக்கவாய்ப்புள்ளது என்று கூற போலீசாருக்கும் மதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் இந்தச் சோதனைகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தங்களை தொண்டர்கள் சோதனையிட்டுக்கொள்ளலாம் என போலீசார் அறிவித்தனர்.
இதையடுத்து ஆண் போலீசாரை மதிமுக ஆண் தொண்டர்களும், பெண் போலீஸை வைகோ வீட்டுப் பெண்களும்சோதனையிட்டனர். இதன் பின்னர் தான் அவர்களை வீட்டுக்குள் அனுமதித்தனர்.
போலீசை வீடியோ எடுத்த மதிமுக:
அதே போல போலீசார் இந்தச் சோதனைகளை நடத்தியபோது அதை வைகோவின் உதவியாளர் வீடியோவில் பதிவு செய்தார்.இந்த கேசட்டையும் போலீசார் கேட்டு எடுத்துச் சென்றுள்ளனர்.
சோதனை முடிந்தபின் கைப்பற்றப்பட்ட புத்தகங்கள், சி.டி., வீடியோ கேசட்டை வைத்து எடுத்துச் செல்ல ஒரு சூட்கேஸை காரில்இருந்து போலீசார் எடுத்துக் கொண்டு வந்தனர். அதையும் திறந்து காட்டினால் தான் உள்ளே அனுமதிப்போம் என மதிமுகவினர்கூறியதால் பெட்டியைத் திறந்து காட்டிவிட்டு எடுத்துச் சென்றனர் போலீசார்.
மொத்தத்தில் மதிமுகவினரின் முன் எச்சரிக்கை மற்றும் கழுகுப் பார்வையால் போலீசாரே திக்குமுக்காடிவிட்டனர்.