இன்று கூடுகிறது காவிரி கண்காணிப்பு குழு: கர்நாடகத்தையும் மீறி தமிழகத்தில் பாயும் நதி நீர்
டெல்லி:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று டெல்லியில் கூடும் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் தமிழக தலைமைச்செயலாளர் சுகவனேஸ்வர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந் நிலையில் கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அம் மாநில அரசு விரும்பாவிட்டாலும் கூடதமிழகத்துக்குள் தண்ணீர் பாய ஆரம்பித்துள்ளது.
உடனடியாக காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்றும் நீர் திறந்து விட மறுத்தகர்நாடக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஜூலை 29ம் தேதி வழங்கப்பட்டது. வரும் 12ம் தேதிக்குள் காவிரி கண்காணிப்புக்குழு கூடி அதற்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் தமிழக, கர்நாடக அணைகளில் உள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நீர் நிலைகளை ஆய்வு செய்த பின்னர் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்திடம்அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் காவிரி கண்காணிப்புக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று டெல்லியில் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் நடக்கிறது. தமிழகம், கர்நாடகம், கேரளம்மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இதன் பின்னர் அடுத்த ஒரு வாரத்திற்குள் தமிழக, கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு அணைகளில் உள்ள நீர்இருப்பை காவிரி கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து காவிரி ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.
அதன் பிறகு வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணையம் கூடும். அந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர்ஜெயலலிதாவும் கலந்து கொள்வார்.
உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்திலும் ஆணையக் கூட்டத்திலும் வேறுவழியில்லாமல் தான் கலந்து கொள்கிறோம் என்று ஜெயலலிதா கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
காவிரியில் வெள்ளம்:
இந் நிலையில் கர்நாடகத்தில் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கூடுதல் நீரை கர்நாடகம்காவிரியில் திறந்துவிட்டு வருகிறது. இந்த நீர் நாளை மேட்டூரை வந்தடையும் என்று தெரிகிறது.
காவிரியில் நீர் விட மாட்டோம் என கர்நாடகம் கூறி வருவதால் தான் பிரச்சனை உண்டானது. இப்போது தனது அணைகளின் கொள்ளவையும் தாண்டி நீர்நிறைந்து வருவதால் உபரி நீரை தமிழகத்துக்குள் திறந்துவிட்டே ஆக வேண்டிய நிலைக்கு கர்நாடகம் தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக கபினி அணைக்கட்டு விரைவாக நிரம்பி வருவதால் அந்த நீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது. மணிக்கு 3,289 கன அடி வீதம் நீர்தமிழகத்துக்குள் பாய்ந்து கொண்டுள்ளது. இந்த நீர் நாளை முதல் மேட்டூர் அணைக்கட்டுக்கு வந்து சேர ஆரம்பிக்கும். தொடர்ந்து சில நாட்கள் இதேபோன்று தண்ணீர் வந்தால் மேட்டூரில் நீர் மட்டம் ஓரளவுக்கு அதிகரித்துவிடும்.
இன்றைய நிலையில் மேட்டூர் அணையில் 43.92 அடிக்கு நீர் உள்ளது. அணையில் இருந்து மணிக்கு 1,526 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது..