பெட்ரோல் பங்க் ஊழல்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி:
பெட்ரோல் பங்க் மற்றும் கேஸ் ஏஜென்சிகள் ஒதுக்கியதில் ஊழல் செய்ததாகக் கருதப்படும் பெட்ரோலியத்துறைஅமைச்சர் ராம்நாயக்கும் பிரதமர் வாஜ்பாயும் ராஜினாமா செய்யக் கோரி எதிர்க் கட்சி எம்.பிக்கள் அமளியில்ஈடுபட்டதைத் தொடர்ந்து 5வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.
ராஜ்ய சபா இன்று கூடியவுடன் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்து கொண்டு போராடி உயிர் நீத்தசுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்றுஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் அடுத்த நிமிடமே எதிர்க் கட்சிகள் கூச்சல் போட ஆரம்பித்தனர். ராம் நாயக் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்காவிட்டால் இன்று முழுவதும் சபையை ஒத்திவைக்கவேண்டியதிருக்கும் என்று ராஜ்ய சபா துணத் தலைவர் நெஜ்மா ஹெப்துல்லா எச்சரித்தார்.
ஆனால் எதிர்க் கட்சிகள் அவர் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ராம் நாயக் ராஜினாமா செய்யக்கோரி தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
நாட்டில் ஏராளமான இடங்களில் வறட்சி தாண்டவமாடிக் கொண்டிருப்பதால் அது குறித்து விவாதிக்க வேண்டும்.அதற்காக விவசாயத்துறை அமைச்சர் அஜித் சிங்கும் இங்கே வந்துள்ளார் என்றும் நஜ்மா கூறிப் பார்த்தார்.
அதற்கும் எதிர்க் கட்சிகள் மசியவில்லை. காங்கிரஸ் எம்.பியான ஜனார்த்தன் பூஜாரி ஒரு செய்தித் தாளைக் கையில்வைத்துக் கொண்டு ஆவேசமாகக் கத்திக் கொண்டிருந்தார்.
இதையடுத்து இன்று முழுவதும் ராஜ்ய சபாவை ஒத்திவைத்தார் நஜ்மா.
லோக்சபாவில்...
இதற்கிடையே பெட்ரோல் பங்க் ஊழல் தொடர்பாக பிரதமர் வாஜ்பாய் பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிஎம்.பிக்கள் ரகளை செய்ததால் லோக்சபாவும் வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது 1945ம் ஆண்டு ஆகஸ்டு 6 மற்றும் 9ம் தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமாமற்றும் நாகசாகி ஆகிய நகர்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதுவரை கடும் கோபத்துடன் அமைதியாகக் காத்துக் கொண்டிருந்த எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி நிகழ்ச்சிமுடிந்த மறு நிமிடமே அவையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பிய அவர்கள், வாஜ்பாய் உடனடியாகப் பதவி விலக வேண்டும்என்றும் கூச்சலிட்டனர்.
அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று பலமுறை கூறிய சபாநாயகர் மனோகர் ஜோஷி அதுபலனளிக்காமல் போகவே சபையை 12 மணி வரை ஒத்திவைத்தார்.
பின்னர் மீண்டும் அவை கூடிய பிறகும் கூட எதிர்க் கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதைத்தொடர்ந்து இன்று முழுவதும் அவையை ஒத்திவைத்தார் ஜோஷி.