போலிச் சாமியார் மோகம்: கருணாநிதி கோபம்
சென்னை:
போலிச் சாமியார்களை நம்பி மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டு இருப்பது வேதனையைத் தருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சிவசக்தி என்ற சாமியாரை நம்பி ஹரியானாவைச் சேர்ந்த திருமணமான, ஒரு பணக்காரப் பெண் வந்துள்ளார். அவரைக் கட்டாயப்படுத்திக்கல்யாணம் செய்ய முயன்றுள்ளார் இந்த 70 வயதைத் தாண்டிய போலிச் சாமியார். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது.
விருதுநகரில் அரிசிக் கடை வைத்து நஷ்டமடைந்ததால் சென்னைக்கு வந்த சிவசக்தி என்ற அந்த நபர் பின்னர் இமயமலைக்குப் போய் சிலமாதம் இருந்துவிட்டு தன்னை சித்தர் என்று கூறிக் கொண்டு பலரை ஏமாற்றியுள்ளார்.
ஹரியாணாவில் திருமணமான பெண்ணையே மயக்கி சென்னைக்குக் கடத்தி வந்து திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
படித்தவர்களாக இருந்தாலும் கூட சாமியார் மோகம் இன்னும் நம்மை ஆட்டிப்படைப்பது வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
இதுபோன்ற சாமியார்கள், வெட்ட வெட்ட வளரும் கிளையாக நடமாடிக் கொண்டிருப்பது, பகுத்தறிவு இயக்கம் இன்னும் உறுதியாகவும்,பலமாகவும், பரவலாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதையே உணர்த்துகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.