தாய்லாந்தில் தமிழர்களின் பிரச்சனைகளை பேசுவோம்: புலிகள்
கொழும்பு:
தாய்லாந்தில் அடுத்த மாதம் துவங்கவுள்ள பேச்சுவார்த்தைகளில் தமிழர் பகுதிகளில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது தவிர பிற அரசியல்விவகாரங்கள் குறித்தும் பேசத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். புலிகள் நிலையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரியமாற்றமாகும் இது.
இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க தாய்லாந்து பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் மூன்றாவதுவாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ஆண்டன்பாலசிங்கத்துடன் இலங்கை அமைச்சர் மொரகொடா நடத்திய பேச்சுவார்த்தைகளில் இது முடிவு செய்யப்பட்டது.
தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் தங்கள் தலைமையில் இடைக்கால அரசை வட-கிழக்குப் பகுதியில் நிறுவுவது குறித்து மட்டுமேபேசுவோம் என புலிகள் கூறி வந்தனர். ஆனால், அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டும், இல்லாவிட்டால் பேச்சுவார்த்தைதொடங்க விட மாட்டேன் என இலங்கை அதிபர் சந்திரிகா கூறி வருகிறார்.
ஆனால், அவரையும மீறி பேச்சுவார்த்தைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தயாராகி வருகிறார். இந் நிலையில் நாட்டின் அரசியல்பிரச்சனைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கத் தயார் என புலிகள் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் தாய்லாந்து பேச்சுவார்த்தைகளுக்கு ஊக்கம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் தமிழர்கள் சந்தித்து வரும் அன்றாடபிரச்சனைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பேச வேணடும் என புலிகள் கூறியுள்ளனர்.
புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் நாடு திரும்பச் செய்வது, சட்டவிரோதமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களைவிடுவிப்பது ஆகியவை குறித்து புலிகள் பேசுவர் என்று லண்டன் புலிகள் வட்டாரங்களை சுட்டிக் காட்டி சுடர் ஒலி பத்திரிக்கை செய்திவெளியிட்டுள்ளது.