வீட்டு வசதி அமைச்சர் துரைராஜ் ராஜினாமா
சென்னை:
மதுரை மாவட்டத்தில் குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைக்கும் காட்டுமிராண்டித்தனமான திருவிழாவில் பங்கேற்க வீட்டுவசதித்துறை அமைச்சர் துரைராஜ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மனித உரிமைக் கமிஷனால் இந்தத் திருவிழா 1996ம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்டுவிட்டது.
ஆனால், தடை செய்யப்பட்ட விழாவில் அமைச்சரே பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த அதி பயங்கரத் திருவிழாதொடர்பாக விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைக் கமிஷன் நேற்று மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பியது.
இதையடுத்து துரைராஜ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஜெயலலிதா டெல்லியில்இருந்து திரும்பியவுடன் சமர்பிக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் கிராமத்தில் குழந்தைகளையும், வயதுக்கு வராதசிறுமிகளையும் உயிருடன் மண்ணில் புதைத்து சில நிமிடங்களுக்குப் பிறகு மீட்கும் அதி பயங்கரமான கோவில்விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைராஜும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரையூர் பகுதியில் வயதுக்கு வராத சிறுமிகள் சீக்கிரம் வயதுக்கு வர வேண்டும் என்று வேண்டியும்குழந்தைகளின் நோய் தீரவும் முத்துக்காளி அம்மன் மற்றும் காளியம்மனுக்கு நேர்த்திக் கடன் செய்கிறார்கள்.
இந்த நேர்த்திக் கடனை செலுத்த 7 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் கோவில் விழாவின்போது வயதுக்கு வராதசிறுமிகளை உயிருடன் மண்ணுக்குள் புதைத்து, மேலே மண்ணைப் போட்டு மூடுகின்றனர். பின்னர் சிலவிநாடிகளுக்குப் பிறகு மீண்டும் அவர்களை வெளியே எடுக்கின்றனர்.
கடந்த 21ம் தேதி நடந்த இந்த அதிபயங்கரமான நிகழ்ச்சியில் 105 சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தக் கோவில்விழாவின் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைராஜ் அழைக்கப்பட்டிருந்தார்.
குழி மாற்றுத் திருவிழா என்று இது அழைக்கப்படுகிறது. இந்த விநோத திருவிழா 400 ஆண்டுகளாக இப்பகுதியில்நடந்து வருகிறதாம். ஆனால், அமைச்சர் கலந்து கொண்டது இது தான் முதல்முறை என்று தெரிகிறது.
இந்த மூடத்தனமான திருவிழா குறித்து தமிழக அரசை விமர்சித்து நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து இந்தத் திருவிழா குறித்து தேசிய மனித உரிமைக் கமிஷனின் உத்தரவுப்படி விசாரணை நடந்தது. மாநில வருவாய்த்துறைஅதிகாரிகளே இந்த விசாரணையை நடத்தினர். இந்த விழாவைத் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டும், அமைச்சர் எப்படிகலந்து கொண்டார் என்று கேட்டும் தமிழக அரசுக்கு கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
நெருக்குதல் மிகவும் அதிகமானதைத் தொடர்ந்து தனது பதவியை துரைராஜ் ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
இந்தத் திருவிழாவில் பங்கேற்றதன் மூலம் எனது தலைவிக்கும் அரசுக்கும் நான் கெட்ட பெயரை வாங்கித் தந்துவிட்டேன். இதனால் எனதுபதவியை ராஜினாமா செய்கிறேன். ஆனால் என்றும் எனது தலைவிக்கு ஒரு வேலைக்காரனாக இருப்பேன் என்று கூறியுள்ளார் துரைராஜ்.