சென்னை: எழும்பூரைக் கலக்கிய "ஏ.கே.47"
சென்னை:
"ஏ.கே.47" என ரயில்வே அதிகாரிகளால் செல்லமாக கூறப்படும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்திசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தி அதிகாரிகளைக் கலங்கடித்தார்.
மத்திய ரயில்வே இணை அமைச்சராகப் பதவியேற்றது முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்ட ரயில்நிலையங்களுக்கு அடிக்கடி திடீர் விஜயம் செய்து சோதனை நடத்தி வருகிறார் மூர்த்தி.
அவர் போடும் உத்தரவுகள் மற்றும் கூறும் யோசனைகளை எப்படி அமல்படுத்துவது என்று தெரியாமல் ரயில்வேஅதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று மூர்த்தி திடீர் விஜயம் செய்தார். சுமார் மூன்றரை மணி நேரம்அங்கு இருந்த அவர் பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டரைத் திறக்க உத்தரவிட்டார். பிளாட்பாரத்தில் உட்காரவசதியின்றி தரையிலேயே அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகளைப் பார்த்த அவர் கூடுதலாக இருக்கை வசதியைஏற்படுத்துமாறு அந்த இடத்திலேயே அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார். தரையில் அமர்ந்திருந்த பெண்பயணிகளிடம் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.
ரயிலில் துண்டு போட்டு இடம் பிடிப்போரைக் கைது செய்யுமாறும், பயணிகளிடம் காசு வாங்கிக் கொண்டு சீட்பிடித்து தரும் போர்ட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
அமைச்சரின் அதிரடி சோதனை மற்றும் உத்தரவுகளை நேரில் பார்த்த பயணிகள், அவர் அடிக்கடி ரயில்நிலையங்களில் சோதனை போட்டால் நிம்மதியாக சீட் பிடித்து ஊருக்குப் போய்ச் சேரலாம் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications