காவிரி: கூடியது கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம்
பெங்களூர்:
காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீர் விடுமாறு உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு குறித்துவிவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கர்நாடக அரசு இன்று அவசரமாகக் கூட்டியுள்ளது. மாலை 3 மணிக்குஇந்தக் கூட்டம் தொடங்கியது.
இன்று காலை நடக்கும் இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் மனு தாக்கல் செய்யமுடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த அப்பீல் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிடும் என்ற கருத்து முதல்வர் கிருஷ்ணா உள்பட பெரும்பாலானஅமைச்சர்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால் தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட்டால் தான் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தில்இருந்து தப்ப முடியும் என கர்நாடக அரசு கருதுகிறது.
அவ்வாறு தமிழகத்துக்கு நீரைத் திறந்திவிட்டால் விவசாயிகளிடம் இருந்து (அரசியல் கட்சிகளிடம் இருந்து) கிளம்பும் எதிர்ப்பைசமாளிக்கும் நடவடிக்கைகளையும் கிருஷ்ணா மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார். அதன் முதல் கட்டமாக விவசாயிகளுக்குவழங்கப்பட்ட கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வதாக இன்று காலை முதல்வர் கிருஷ்ணா அறிவித்தார்.
காரிப் பருவ விவசாயத்துக்கு இந்த ஆண்டு கர்நாடகம் ரூ. 975 கோடியை விவசாயிகளுக்குக் கடனாக வழங்கியது. இதற்கானவட்டியாக விவசாயிகள் ரூ. 127 கோடியை செலுத்த வேண்டும். இந்த வட்டியை ரத்து செய்வதாக கர்நாடகம் அறிவித்துள்ளது.
தமிழகத்துக்குத் தண்ணீர் விட கர்நாடகம் மனதளவில் தயாராக இல்லை. அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின்தீர்ப்பையும் மீற முடியாத நிலையில் அந்த மாநிலம் உளளது.
இதனால் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலேயே மேல்முறையீட்டு (அப்பீல்) மனு தாக்கல் செய்யலாம் எனமாநில பா.ஜ.க. தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் முதல்வர் கிருஷ்ணாவை வலியுறுத்தியுள்ளனர்.
இதன்மூலம் நீர் திறந்துவிடாமல் சில நாட்கள் இழுத்தடிக்கலாம் என கர்நாடகம் நினைக்கிறது.
சட்ட விளையாட்டு வேண்டாம்: நீதிபதிகள்
நேற்று தனது தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கிர்பால் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தனது தீர்ப்பில்,
தமிழகத்துக்கு எவ்வளவு நீர் திறந்து விடுவது என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை பிரதமர் வாஜ்பாயிடம்ஒப்படைக்கிறோம். காவிர் நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்துக்குத் தண்ணீர் விடுவது குறித்து இறுதி முடிவுஎடுக்க வேண்டும்.
அந்தக் கூட்டம் கூட்டப்படும் நாள் வரை தினமும் தமிழகத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் விட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து கர்நாடக அரசின் வழக்கறிஞர் சில சட்ட விவரங்களை எடுத்து வைத்துப் பேசினார். அப்போது அவரைத் தடுத்துநிறுத்திய நீதிபதிகள், இந்த சட்ட விளையாட்டை (லீகல் ஜிம்னாஸ்டிக்ஸ்) அப்புறம் வைத்துக் கொள்ளலாம். முதலில்தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு மாநில அரசிடம் கூறுங்கள் என்று நோஸ்-கட் கொடுத்தனர்.
இதன்மூலம் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீவிரமாக இருப்பதை நீதிபதிகள் சுட்டிக் காட்டிவிட்டனர்.
ஆனால், இந்த உத்தரவை மதித்து நீரைத் திறந்துவிடும் முடிவில் கர்நாடகம் இல்லை. இந்தத் தீர்ப்பை எப்படி மீறுவது என்பதில்தான் கர்நாடகம் இப்போது தீவிரம் காட்டி வருகிறது.
பிரதமரை நெருக்கத் திட்டம்:
அடுத்த காவிரி ஆணையக் கூட்டம் நடக்கும் வரை தான் 1.25 டி.எம்.சி. நீர் விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால் உடனே இந்த ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் வாஜ்பாயை நெருக்கவும் கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.
இன்று நடக்கும் கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் கூட உடனே காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை வேண்டும் என்றுகோரி தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு கூட்டம் நடத்தப்பட்டால் எப்பாடுபட்டாவது தமிழகத்துக்கு நீரைத்தர வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைக்குமாறு வாஜ்பாய்க்கு கர்நாடகம் நெருக்குதல் தரும். அல்லது தமிழகத்துக்குத் தரவேண்டிய நீரின் அளவை குறைக்கச் சொல்லி வாஜ்பாயை கர்நாடகம் நெருக்கும்.
அமைச்சரவையும் கூடுகிறது:
இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்தவுடன் அமைச்சரவைக் கூட்டத்தையும் முதல்வர் கிருஷ்ணா கூட்டுகிறார்.