For Daily Alerts
Just In
மும்தாஜின் பயம்.. மனோரமாவின் பிரார்த்தனை!
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 5 மணி முதலே பெரும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
- மகன் பூபதியுடன் வந்திருந்த நடிகை மனோரமா கூறுகையில், எல்லாம் நல்லபடியாக நடந்து, பிரச்சனையில்லாமல் திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். கர்நாடகம் நமக்கு உரிய தண்ணீரைத் தர வேண்டும் என்றார்.
- இதுவரை இப்படி போராடி நமக்குப் பழக்கம் இல்லை. இதுவே கடைசியான போராட்டமாக இருக்க வேண்டும். அந்த அரசுக்காக கர்நாடக கலையுலகினர் போராடினார்கள். இதற்கு பதிலடியாகத் தான் நாம் நமது மக்களுக்காக போராடுகிறோம் என்றார் சூர்யா.
- காவிரி தண்ணீர் தமிழர்களின் உரிமை. எனவே அதற்காக போராடுவது தவறில்லை என்றார் மும்தாஜ். ரசிகர்கள் கைவரிசை காட்டி விடுவார்களோ என்ற பயத்தில் இவர் பர்தாவுடன் நெய்வேலிக்குப் போகிறார்.
- நடிகர் முரளிதான் அத்தனை பேரையும் கவர்ந்தவர். யாரைப் பார்த்தாலும் தமிழ் வாழ்க என்று கூறி விட்டுத்தான் பேசுகிறார் (பாரதிராஜாவின் இந்தக் கோரிக்கையை பின்பற்றுபவர் இவரும், சத்யராஜூம்தான்). இந்த மாபெரும் போராட்டத்திற்குப் பின்னர் கர்நாடக அரசு மனம் மாறி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
- இந்த போராட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். இதற்குப் பின்னாவது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவிரியில் நமக்குரிய தண்ணீரைத் திறந்து விட கர்நாடகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நடிகர் சத்யராஜ்.
- வினுசக்கரவர்த்தி கூறுகையில், வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் உயர்வான் என்பார்கள். எனவே விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் சாப்பாடு, சாப்பாட்டுக்குப் பிறகுதான் பொழுதுபோக்கு. எனவே விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் குரல் கொடுக்கப் போகிறோம். இதனால் நல்லது நடந்தால் ரொம்ப மகிழ்ச்சி என்றார்.
- கலைஞரின் ஆசிர்வாதத்தோடும், வாழ்த்துக்களோடும் அவரது அன்புத் தம்பியாக நெய்வேலி போராட்டத்திற்குப் போவதில் நிரம்ப மகிழ்ச்சி என்று தனது தமிழ்ப் புலமையையும், கட்சி உணர்வையும் கலந்து பேசினார் சந்திரசேகர்.
- கோவை சரளா சின்னப் பெண் போல பேன்ட், டீசர்ட்டில் வந்திருந்தார்.
- அத்தனை பேரையும் பஸ்சில் ஏற்றி அனுப்பும் பணியை விஜயகாந்த் உத்தரவின் பேரில் வடிவேலு மேற்கொண்டிருந்தார். மதுரை ஸ்டைலில் அனைவரையும் அழைத்து அட, ஏறுங்கப்பா. தள்ளி உக்காந்தா தான் என்ன? என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.
Comments
Story first published: Saturday, October 12, 2002, 5:30 [IST]