கெட்ட பெயரை சரிக்கட்டவே ரஜினி உண்ணாவிரதம்: ராமதாஸ்
சென்னை:
சமீப காலமாகத் திரையுலகில் தனக்கு ஏற்பட்டுள்ள சரிவைத் தூக்கி நிறுத்தவும் தனக்கு ஏற்பட்டிருந்த கெட்டபெயரைச் சரிக்கட்டிக் கொள்வதற்காகவுமே நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்தார் என்று பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கங்கை-காவிரி இணைப்புத்திட்டம் நிறைவேற குறைந்தது 300 ஆண்டுகளாவது ஆகும் என்று கூறியிருந்தார்.
அந்த "நம்பிக்கை"யிலேயே நதிகள் இணைப்புத் திட்டத்திற்காக ரூ.1 கோடி தருவதற்குத் தயார் என்று ரஜினிகூறியுள்ளார்.
சமீப காலமாக மக்கள் மத்தியில் அவருக்குத் தொடர்ந்து அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. அந்த கெட்டபெயரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தனக்கு ஏற்பட்டுள்ள சரிவைத் தூக்கிநிறுத்துவதற்காகவுமே ரஜினி உண்ணாவிரதம் இருந்தார்.
"மலைகளே ரஜினியிடம் மோதத் தயங்கும் போது மாம்பழம் என்ன செய்துவிட முடியும்?" என்ற வாசகத்துடன்கூடிய ஒரு அட்டை ரஜினியின் உண்ணாவிரத மேடை அருகே வைக்கப்பட்டிருந்தது.
இதெல்லாம் ரஜினிக்குத் தெரிந்து தான் வைக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் பாட்டாளி மக்கள்கட்சியை வம்புக்கிழுக்கும் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம் தான் மாம்பழம் என்பது குறிப்பிடத்தக்கது.