பாகிஸ்தான் செல்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பிரதமர் வாஜ்பாய்கலந்துகொள்வார் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திக் விஜய் சிங் கூறினார்.
"ஆஜ் தக்" டி.விக்கு அளித்த பேட்டியின் போது இதைத் தெரிவித்த திக் விஜய் சிங், சார்க் மாநாட்டுக்காக மட்டும்தான் வாஜ்பாய் செல்கிறாரே தவிர பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான முஷாரப்புடன் பேச்சுவார்த்தை எதையும்நடத்த மாட்டார் என்றும் கூறினார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் வாஜ்பாயும் முஷாரப்பும்கலந்து கொண்டாலும், பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்பது நினைவிருக்கலாம்.
படைகளை வாபஸ் பெற பாக்.கும் சம்மதம்:
பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியப் படைகள் குறைத்துக் கொள்ளப்படும் என்று இந்தியா அறிவித்ததைத்தொடர்ந்து பாகிஸ்தானும் தன் படைகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் அறிவிப்பு வெளியாகி ஒரு நாள் கூட ஆகாத நிலையில் இந்திய எல்லையில் குவிக்கப்பட்டுள்ளபாகிஸ்தான் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று இன்று மாலை அந்நாடு அறிவித்தது.
வெகு விரைவில் எல்லையிலிருந்து தங்களது படைகள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என்று பாகிஸ்தான்வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற அவசரக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவின் படைக் குறைப்பு அறிவிப்பை பாகிஸ்தான் வரவேற்பதாக அந்நாடு அறிவித்தது. சரியானநேரத்தில் எடுக்கப்பட்ட நல்ல நடவடிக்கை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருஅறிக்கையில் கூறியிருந்தார்.
இந்தியாவின் இந்தப் படைக் குறைப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக என்றுஅமெரிக்காவிலுள்ள அந்நாட்டின் தூதர் அஷ்ரப் ஜஹாங்கீர் காஸியும் வாஷிங்டனில் தெரிவித்தார்.
இந்தப் படைக் குறைப்பு நடவடிக்கையோடு பாகிஸ்தானுடன் உடனடியாக காஷ்மீர் விவகாரம் குறித்தபேச்சுவார்த்தைகளையும் இந்தியா தொடங்க வேண்டும் என்றும் காஸி கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் அறிவிப்பு:
முன்னதாக, காஷ்மீரில் சுமூகமாகத் தேர்தல்கள் முடிவடைந்து விட்டதால், இனிமேலும் பாகிஸ்தான் எல்லையில்இந்தியப் படைகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தியாவின் தேசியப் பாதுகாப்புஆலோசனைக் குழு பரிந்துரைத்தது.
இதை நேற்று இரவு கூடிய மத்திய அமைச்சரவைப் பாதுகாப்புக் குழுவும் ஏற்றுக் கொண்டது. பிரதமர் வாஜ்பாய்தலைமையில் அவருடைய இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில்இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளிலிருந்து மட்டும் படைகளை விலக்கிக் கொள்ளப்படும் என்றுகூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் பேசும் போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
ஆனால் காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்தியப் படையினர் தொடர்ந்துமுகாமிட்டிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
படைக் குறைப்பு செய்த போதிலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்வது வரைவேறு எந்தக் காரணம் கொண்டும் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும் இந்தியாஉறுதியாகக் கூறியுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் வரவேற்பு:
இந்தியாவின் இந்தப் படைக் குறைப்பு நடவடிக்கையை அமெரிக்காவும், ரஷ்யாவும் உடனடியாக வரவேற்றுஅறிக்கை விடுத்தன.
இந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 10 மாதங்களாக நிலவி வந்தபதற்றம் வெகுவாகத் தணியும் என்று அமெரிக்காவின் தெற்காசிய விவகாரத்துறை இணை அமைச்சர் கிறிஸ்டினாரோக்கா தெரிவித்தார்.
காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்திவிட்டு படைகளைத் திரும்பப் பெற்றுள்ளதன் மூலம் இந்தியா தன்னுடையஉண்மையான பொறுப்புணர்ச்சியை வெளிக்காட்டியுள்ளது என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின்வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் படைக் குறைப்பு நடவடிக்கையை இங்கிலாந்தும் பாராட்டியுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும்பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம் என்றுஇங்கிலாந்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
-->