திமுக இளைஞரணி போராட்டம்: சென்னையில் ஸ்டாலின் கைது
சென்னை:
தமிழக அரசை எதிர்த்து திமுக இளைஞர் அணியினர் நடத்திய போராட்டத்தின் போது அதன் செயலாளரான மு.க.ஸ்டாலினை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணி சார்பில் இன்று அரசை எதிர்த்துப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
ஊர்வலமாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அவர்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டம் செய்யமுயன்றனர்.
இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதாவதற்குமுன் நிருபர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்,
விலை மற்றும் கட்டண உயர்வுகளால் மக்களைத் துன்புறுத்தி, அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதையே அதிமுகஅரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். ரேஷன் அரிசி, பஸ்கட்டணம் உள்ளிட்ட பல விலை உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும்.
மேலும் மின் கட்டணத்தையும் விரைவில் உயர்த்தவுள்ள தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தஇலவச மின்சாரத்தையும் ரத்து செய்யவுள்ளது. இந்த முடிவுகளையும் அரசு உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும்.
இவற்றையெல்லாம் செய்யாவிட்டால் திமுக அடுத்தகட்டப் போராட்டத்தில் விரைவில் ஈடுபடும். போலீசாரின்அடக்குமுறையையும் மீறி எங்களுடைய இன்றைய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றார் ஸ்டாலின்.
பின்னர் ஸ்டாலினும் அவருடன் கைது செய்யப்பட்ட 5,000 திமுக தொண்டர்களும் எழும்பூர் ராஜரத்தினம்ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டனர்.
விழுப்புரத்தில் தடியடி:
இதற்கிடையே விழுப்புரத்தில் நான்கு ரோடு சந்திப்பில் சாலை மறியல் செய்ய முயன்ற திமுக தொண்டர்களைப்போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் சுமார் 600 திமுக தொண்டர்கள் போராட்டம்நடத்தினர்.
திமுக தொண்டர்கள் அனைவரும் ஊர்வலமாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாகக் கூடியபோது, பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் அருகே திமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்தி போலீசாரால்கைது செய்யப்பட்டனர். அவர்களில் முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் முக்கியமானவர்.
கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்ளிலும் முக்கிய திமுக பிரமுகர்கள் உள்ளிட்டஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே 10,000 திமுகவினர் கைது:
இதற்கிடையே நேற்று இரவு வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,000க்கும் மேற்பட்ட திமுகவினரைபோலீசார் கைது செய்தனர்.
இதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக இளைஞர் அணியின் சார்பில் அமைதியான முறையில் நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டத்தைசீர்குலைக்கவே இந்தக் கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
போராட்டம் வெற்றி பெற்று விடும் என்ற பயத்தின் காரணமாகவே ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில்போலீஸார் கைது படலத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸார் மற்றும் அரசின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். திட்டமிட்டபடி வெற்றிகரமாக இந்தப்போராட்டங்கள் நடந்தேறும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.