For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் கடும் அமளி- எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எதிர்க் கட்சிகளுடன் விவாதிக்காமலேயே சட்டம் நிறைவேற்றியதைக் கண்டித்து திமுக, பா.ம.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. ஆனால், பா.ஜ.க. வெளிநடப்புசெய்யவில்லை.

தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முன்னாள் துணை ஜனாதிபதிகளான ஜாட்டி, கிருஷ்ணகாந்த்ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று காலை அவை கூடியதும் கூட்டுறவுத்துறை அமைச்சர் தனபாலை அழைத்த சபாநாயகர் காளிமுத்து கூட்டுறவு அமைப்புகளின் தனிஅலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டத்தை தாக்கல் செய்யுமாறு கூறினார்.

அப்போது எழுந்த எதிர்க் கட்சித் தலைவரான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், இந்தச் சட்டத்துக்கு எதிராக நான் தீர்மானம் கொண்டுவருவதாக ஏற்கனவே முறைப்படி தெரிவித்துள்ளேன். அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தாமல் இப்படி சட்டத்தைக் கொண்டுவருவது தவறு. முதலில் அதன் மீது விவாதம் நடத்த எதிர்க் கட்சியினரை அனுமதிக்க வேண்டும்.

நான் கொடுத்த தீர்மானத்தை அவை உறுப்பினர் ஏற்கும் பட்சத்தில் இந்தச் சட்டத்துக்கே அவசியம் இருக்காது என்றார்.

அப்போது திமுக, பா.ம.க. உள்ளிட்ட பிற கட்சியினரும் எழுந்து இந்தச் சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என குரல்எழுப்பினர்.

அவர்களுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் எழுந்து நின்று சத்தம் போட்டனர். இதனால் அவையில் பெரும் கூச்சலும்குழப்பமும் நிலவியது. ஒருவரை ஒருவர் பார்த்து திட்டிக் கொண்டனர்.

இவ்வாறு எதிர்க் கட்சியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதுகுறித்து குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக சபாநாயகர் காளிமுத்து இரைச்சல்களுக்கு இடையே அறிவித்தார்.

உடனே அதிமுகவினர் அனைவரும் சட்டத்தை ஆதரிப்பதாகக் குரல் கொடுத்தனர்.

அப்போது எழுந்த முதல்வர் ஜெயலலிதா, ஒரு சட்டத்தைக் கொண்டு வந்த நிறைவேற்ற அரசுக்கு முழு உரிமை உண்டு. இதை எதிர்க்கட்சியினர் தடுக்க முடியாது என்றார்.

இதையடுத்துப் பேசிய நிதியமைச்சர் பொன்னையன், ஒரு சட்டம் கொண்டு வரப்படும்போது அதை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரஎதிர்க் கட்சியினருக்கு உரிமை உண்டு. இதனால் சட்டத்தையும், எதிர்த்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

அப்போது இடைமறித்த சபாநாயகர் காளிமுத்து, எதிர் காலத்தில் இது போலச் செயப்படும். ஆனால், இப்போது சட்டம்நிறைவேற்றப்படுகிறது என்றார்.

இதையடுத்து திமுக, காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை உறுப்பினர்கள்அவையில் இருந்து வெளிநடப்பு செய்தவாக அறிவித்தனர். ஆனால், சமீபகாலமாக அதிமுகவை நெருங்கி வரும் பா.ஜ.க. இந்தவெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.

எதிர்க் கட்சியினரை சட்டசபையில் பேசவே விடாமல் தடுத்துவிட்டு சட்டத்தை அரசே நிறைவேற்றிக் கொள்கிறது. இதற்கு சபாநாயகரும்துணை போகிறார். அவரது செயலால் அவையில் தவறான முன் உதாரணம் உருவாக்கப்பட்டுவிட்டது.

இதனால் அவையை விட்டு வெளியேறுகிறோம் என்று கூறியபடி எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்தக் கூச்சல் -குழப்பத்தால் அவையில் சுமார் 30 நிமிடங்கள் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X