விரைவில் வைகோவை சந்திக்க கருணாநிதி முடிவு
வேலூர்:
முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரானவைகோவை சந்தித்ததைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியும் அவரைச் சந்திக்கப் போகிறார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்ததாகக் கருதப்படும் வைகோ பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் வேலூருக்குவந்து வைகோவை சந்தித்து விட்டுச் சென்று விட்டனர்.
ஆனால் தமிழகத்தில் இருந்து கொண்டே அதே கூட்டணியில் உள்ள திமுக தலைவர்கள் ஒருவர் கூட வைகோவைச்சென்று பார்க்கவில்லை.
இந்நிலையில் சென்னை-அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர்முரசொலி மாறனை வைகோவின் மகன் துரை வையாபுரியும் மற்றும் சில மதிமுக மத்திய அமைச்சர்களும் சென்றுபார்த்து அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
இதற்குக் கைமாறாக வைகோவை சந்தித்துவிட்டு வருமாறு துரைமுருகனை கருணாநிதி கேட்டுக் கொண்டார்.அவரும் வைகோவை சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பினார்.
வைகோ கைது செய்யப்பட்டு 110 நாட்களுக்கு மேல் ஆகியும் கூட மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு கண்டுகொள்ளவே இல்லை என்பதால் அதன் மீது மதிமுக கோபத்துடன் உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே பல்வேறு சூழ்நிலைகளில் அதிமுகவும் பா.ஜ.கவை நெருங்கிக் கொண்டே வருவதால், திமுகவும்பா.ஜ.கவுடன் கடும் அதிருப்தி கொண்டுள்ளது.
தமிழகத்தில் திமுகவும் பா.ஜ.கவும் ஏற்கனவே உறவைத் துண்டித்துக் கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.தங்களுக்கு இடையே நட்பு மட்டும் தொடர்கிறது என்று இரு கட்சிகளுமே அறிவித்துள்ளன.
இந்நிலையில் துரைமுருகன்-வைகோ சந்திப்பின் மூலம் திமுகவும் மதிமுகவும் மீண்டும் நெருங்க ஆரம்பித்துள்ளன.
இவர்கள் சந்திப்பைத் தொடர்ந்து கருணாநிதியும் விரைவில் வேலூர் சென்று வைகோவைச் சந்திப்பார் என்றுதெரிகிறது.
இது தொடர்பாக வந்த தகவல்களையடுத்து கருணாநிதியிடமே நேரடியாகக் கேட்டபோது, வைகோவைச்சந்திப்பதில் என்ன தவறு என்று நிருபர்களிடம் அவர் பதிலுக்குக் கேட்டார்.
ஆக இருவருடைய சந்திப்பும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் என்றைக்கு இந்தச் சந்திப்பு என்பது தான்இன்னும் முடிவாகவில்லை.