நாளை இந்தியா வருகிறார் பில் கேட்ஸ்
டெல்லி:
புகழ்பெற்ற கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான "மைக்ரோசாப்ட்" நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் நாளைமுதல் இந்தியாவில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
நாட்டிலுள்ள பல முக்கியமான சாப்ட்வேர் நிறுவனங்களுக்குச் செல்லவுள்ள பில் கேட்ஸ், பல முக்கியத்தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன்னுடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல்பாடுகளை நேரில்பார்வையிடவுள்ள பில் கேட்ஸ், பல புதிய திட்டங்களையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் "பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுன்டேசன்" என்ற அமைப்பு இந்தியாவில் பலபொதுச் சேவைகளையும் செய்து வருகிறது. குறிப்பாக, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தஅமைப்பு பெரும் உதவிகளைச் செய்து வருகிறது.
இது தொடர்பான நடவடிக்கைகளைத் தன்னுடைய முதல் நாள் பயணத்தின் போது பில் கேட்ஸ் டெல்லியில்பார்வையிடவுள்ளார்.
ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன்ஆகியோரையும் பில் கேட்ஸ் சந்திக்கவுள்ளார்.
"இந்தியாவின் சிலிக்கன் வேலி" என்று அழைக்கப்படும் பெங்களூருக்கும் பில் கேட்ஸ் செல்லவுள்ளார்.
வரும் 13ம் தேதி பெங்களூர் செல்லும் இவர், இந்தியாவின் சாப்ட்வேர் ஜாம்பவான்களான "இன்போசிஸ்" தலைவர்நாராயணமூர்த்தி மற்றும் "விப்ரோ" தலைவர் ஆஸிம் பிரேம்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவையும் பில் கேட்ஸ் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் அன்றே மும்பை செல்லும் பில் கேட்ஸ், இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களைச் சந்திக்கவுள்ளார்.அதைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளையும் சந்திக்கவுள்ளார் அவர்.
மொத்தத்தில் இந்தியாவிற்கு மூன்றாவது முறையாக வரும் பில் கேட்ஸிற்கு இது மிகவும் முக்கியமான பயணமாகஇருக்கும் என்று கருதப்படுகிறது.
-->