நாட்டின் முக்கிய நதிகளை இணைக்க குழு அமைப்பு
டெல்லி:
நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க துணைப் பிரதமர் அத்வானி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய நதிகளை இணைத்து வறட்சியையும் வெள்ளப் பெருக்கையும் கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு 10 ஆண்டுகள் வரை மத்திய அரசுக்கு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இதையடுத்துஅது தொடர்பான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
முதல்கட்டமாக இத் திட்டத்தை அமலாக்க முடியுமா, இதற்கு தேவைப்படும் நிதியின் அளவு, தேவைப்படும் புதிய சட்டங்கள்ஆகியவை குறித்து விவாதிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவுக்கு அத்வானி தலைவராக இருப்பார். இதில் நிதியமைச்சர்ஜஸ்வந்த் சிங், நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சேத்தி, மின்துறை அமைச்சர் ஆனந்த் கீதே, சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர்.பாலு, திட்டக் கமிஷன் தலைவர் கே.சி. பந்த் ஆகியோர் தவிர வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் இடம்பெற்றுள்ளனர்.
நாட்டின் முக்கிய வட பகுதி நதிகளை அண்டை நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து வருவதால் இதில் எழும் சர்வதேசசிக்கல்களையும் கருத்தில் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் சின்ஹாவையும் இக் குழுவில் பிரதமர் வாஜ்பாய்இடம் பெறச் செய்துள்ளார்.
நீர் வளத்துறை செயலாளர் கோஸ்வாமியும் இதில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்களும் இக் குழுவில் சேர்க்கப்படுவர் என்று தெரிகிறது.
இத் தகவல்களை பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் குழு குறித்து விவரத்தை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. நாடாளுமன்றக் கூட்டம் நடந்து வருவதால் இந்தவிவரம் அங்கு தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-->