வீரப்பனை பிடிக்க உதவி செய்பவர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க உதவி செய்பவர்களுக்கான பரிசுத் தொகையை ரூ.2 கோடியிலிருந்து ரூ.5கோடியாக கர்நாடக அரசு அதிகரித்துள்ளது.
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடந்த 8ம் தேதி காட்டுக்குள் மர்மமானமுறையில் இறந்து கிடந்தார்.
இதைத் தொடர்ந்து வீரப்பனைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அவனைப் பிடிக்க உதவிசெய்பவர்களுக்கு ரூ.2 கோடி பரிசாக அளிக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது.
இந்நிலையில் இந்தப் பரிசுத் தொகை ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக உள்துறைஅமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறுகையில்,
வீரப்பனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்கும் பணியில் கர்நாடக அதிரடிப்படையினர் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
வீரப்பனைப் பிடிக்க உதவும் நபர்களுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். அதைத்தற்போது ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளோம்.
தன்னார்வ அமைப்புகள் மற்றும் போலீசார் ஆகியோருக்கும் இந்தப் பரிசுத் தொகை பொருந்தும்.
நாகப்பா படுகொலை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம்.
இந்த விசாரணைக் கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்நியமிக்கப்பட்டுள்ளார் என்றார் கார்கே.
"இனி பேச்சே கிடையாது"- கிருஷ்ணா:
இதற்கிடையே எதிர்காலத்தில் யாராவது கடத்தப்பட்டால் கடத்தியவருடன் பேச்சுவார்த்தையே நடத்தப்போவதில்லை என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் இன்று அவர் பேசுகையில்,
நாகப்பாவை மீட்கும் விஷயத்தில் நாங்கள் தோற்று விட்டோம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இதற்காகமக்கள் தரும் எந்தத் தண்டனையையும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார்.
ஆனால் இனி வரும் காலத்தில் யார் கடத்தப்பட்டாலும் சரி, யார் கடத்தினாலும் சரி. எந்தக் காரணத்தைக்கொண்டும் கடத்தியவருடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை.
கேசட்டை அனுப்பினால் அதை நாங்கள் கேட்கக் கூட மாட்டோம். இந்தக் கொள்கையில் இனி உறுதியாகஇருப்போம். இதிலிருந்து எந்த வகையிலும் பின் வாங்க மாட்டோம்.
இது குறித்து மற்ற மாநில முதல்வர்களுக்கும் நாங்கள் கடிதங்களை அனுப்புவோம். கடத்தல் நாடகங்களின்போதுபேச்சுவார்த்தையே நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றார் கிருஷ்ணா.
-->