எதிர்க் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த ஜெயலலிதா
சென்னை:
சமீபத்தில் காலமான சாத்தான்குளம் தொகுதி தமாகா எம்.எல்.ஏவான மணி நாடாரின் மனைவி ஜானகி இன்று முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.
காங்கிரஸ் கட்சியில் தமாகா இணைந்து விட்ட போதிலும், கிள்ளியூர் எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் தலைமையிலான ஐந்து பேர் மட்டும் தொடர்ந்து தமாகாவிலேயே இருப்பதாக் கூறினர். இவர்களில் மணி நாடாரும் ஒருவர்.
அதிமுக கூட்டணியிலிருந்து தமாகா வெளியேறியதை இவர்கள் ஐந்து பேரும் ஆரம்பத்திலிருந்தே கண்டித்து வந்தனர். மேலும் தமாகாவை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைப்பதையும் அவர்கள் எதிர்த்தனர். அவர்கள் ஐந்து பேரும் தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் மணி நாடார் திடீரென மரணமடைந்து விட்டார். இதையடுத்து அவருடைய சாத்தான்குளம் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அங்கு அதிமுகவுக்கு எதிராக கூட்டு சேர்ந்து போட்டியிட எதிர்க் கட்சிகள் திட்டமிட்டு வரும் நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் மறைந்த எம்.எல்.ஏவின் மனைவியை இழுத்துப் போட்டுள்ளது அதிமுக.
மறைந்த எம்.எல்.ஏவின் அனுதாப ஓட்டை சுலபமாக அள்ளிவிடலாம் என அதிமுக நினைக்கிறது. இத் தொகுதியில் ஜானகியையே ஜெயலலிதா அதிமுக சார்பில் போட்டியிட வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதன் மூலம் அந்தத் தொகுதியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்றே அதிமுக நினைக்கிறது.
ஜானகியுடன் சில காங்கிரஸ் தொண்டர்களும் இன்று அதிமுகவில் சேர்ந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-->