குற்றவாளிகள் "எஸ்கேப்" ஆவதைத் தடுக்க ஜெ. யோசனை
சென்னை:
குற்றவாளிகள் போலீசாரிடம் பிடிபடாமல் எளிதில் தப்பி விடுவதைத் தடுக்க புதிய யுக்திகளைக் காவல்துறை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
குற்றங்களைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கை சென்னையில் துவக்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில்,
சமீப காலங்களில் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் வெகு எளிதாகத் தப்பிச் சென்று விடுகின்றனர். வெகு சிலர்தான் போலீசாரிடம் பிடிபடுகின்றனர்.
இவ்வாறு குற்றவாளிகள் எளிதில் தப்பி விடாமல் தடுக்க வேண்டுமானால் காவல்துறை புதிய புதிய யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும்.
போலீசார் அவ்வாறு சில புதிய யுக்திகளைக் கையாளும் போது அதற்குப் பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நவீன கைரேகை நவீன டி.என்.ஏ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகவே மாநிலம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களைத் திறக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
பாலியல் பலாத்காரம் உள்பட பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போரிடும் திறமையை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான முறையான பயிற்சிகளும் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
தற்போது உலகமயமாக்கலுக்கு இணையாக தீவிரவாதச் செயல்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. இன்னும் சொல்லப் போனால் இந்த இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதுதான் அதை விட வருத்தமானதாகும் என்றார் ஜெயலலிதா.
-->