சென்னையில் சிங்கப்பூர் அதிபர் நாதன்
சென்னை:
சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர். நாதன் 3 நாள் பயணமாக இன்று மாலை சென்னை வருகிறார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் சிங்கப்பூர் அதிபர் நாதன், தன் பயணத்தின் கடைசிக் கட்டமாக தன்னுடைய பூர்வீகமான தமிழகத்திற்கு வருகிறார்.
இன்று மாலை ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் அவருக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து நேரடியாக பார்க் ஷெரட்டன் ஹோட்டலுக்கு அவர் செல்கிறார். அங்கு ஓய்வெடுத்த பின்னர் ராஜ் பவன் சென்று ஆளுநர் ராமமோகன் ராவைச் சந்திக்கிறார். அங்கு நாதனுக்கு ஆளுநர் இரவு விருந்து அளிக்கிறார். பிறகு மீண்டும் ஹோட்டலுக்கு திரும்புகிறார் நாதன்.
பின்னர் நாளை காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் கலாஷேத்திராவுக்கு நாதன் செல்கிறார். அங்கு சுற்றிப் பார்த்த பின் பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய குடிசைத் தொழில் எம்போரியத்திற்கு செல்கிறார்.
அதன் பின்னர் கிண்டியில் உள்ள ஐ.ஐ.டிக்கு செல்கிறார். நாளை மாலை சென்னையில் உள்ள சிங்கப்பூர் குடிமக்களைச் சந்திக்கிறார்.
நாளை மறுநாள் காலை தென் மாநிலங்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கிராமமான தக்ஷின சித்ராவுக்கு சென்று பார்வையிடுகிறார். அன்று மாலை நிருபர்களைச் சந்தித்த பின் இரவு விமானத்தில் சிங்கப்பூர் செல்கிறார்.
-->