சுப்பிரமணியம் சுவாமி... பாகிஸ்தான்.. புலிகள்.. தினகரன்...
சென்னை:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை சந்தித்து பயங்கரவாத ஒழிப்பு குறித்துப் பேசப் போவதாக தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறினார்.
அடிக்கடி சரவெடி போல திடீர் அறிவிப்புகள், சவால்கள், வழக்குகளை போடுவதில் வல்லவர் சு.சுவாமி. அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நான் பாகிஸ்தான் போகிறேன். அங்கு அதிபர் முஷாரப்பை சந்திக்கிறேன். அப்போது பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து அவரிடம் பேசுவேன். பயங்கரவாதத்தை ஒழிப்பது அவரால் முடியவில்லை என்று கருதினால், அந்தப் பணியை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று கோரிக்கை வைப்பேன்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் நிநங்கள் போட்டியிடுவதா அல்லது யாருக்காவது ஆதரவு தருவதா என்பது குறித்து கட்சியின் துணைத்தலைவர் சந்திரலேகா தலைமையில் மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றார் அவர்.
புலிகள் கூட்டம்: சுவாமியின் மனு தள்ளுபடி
விடுதலைப்புலிகள் பங்கேற்கும் எந்தக் கூட்டத்திலும் இந்திய அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் தற்போது நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த நவம்பர் 25ம் தேதி நிதி திரட்டும் மாநாடு ஒன்று நடைபெற்றது.
நார்வே அரசு ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் இலங்கை, அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டு நிதியுதவிகளை அறிவித்தன. இம்மாநாட்டில் புலிகளும் கலந்து கொண்டனர்.
புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த மாநாட்டில் மத்திய அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் சுவாமி பொது நல மனு ஒன்றைக் தாக்கல் செய்திருந்தார்.
இம்மாநாட்டில் மட்டுமல்லாமல் புலிகள் பங்கேற்கும் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அம்மனுவில் சுவாமி கோரியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக மத்திய அரசு அளித்த பதிலில், நார்வேயில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுவாமியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தினகரன் பிரச்சனை:
சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த வழக்கில் வரும் பிப்ரவரி 26ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தினகரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுட்ட பணத்தை வெளிநாட்டில் சட்ட விரோதமாக பதுக்கினார் தினகரன். இது குறித்து அவர் மீது புகார் சொல்லப்பட்டபோது நான் ஒரு என்.ஆர்.ஐ., சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றவன் என்று தெரிவித்தார்.
ஆனால், பெரிகுளத்தில் போட்டியிட்டு எம்.பியானார். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர் எப்படி இந்தியாவில் போட்டியிட்டு எம்.பியாகலாம் என்று கேட்டு சுப்பிரமணியம் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன் ஆகியோ முன் நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜராகி வாதாடிய சுவாமி, கோர்ட் நோட்டீஸ் அனுப்பியும் கூட தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். அவரை நீதிமன்றத்துக்கு வரச் செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்ததுப் பேசிய நீதிபதிகள், இந்த வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அன்றைய தினம் தினகரனோ அல்லது அவரது வழக்கறிஞரோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சுப்பிரமணியம் சுவாமி ஆங்கிலப் பத்திரிக்கை மூலம் விளம்பரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனால் அன்றைய தினம் தினகரனோ அல்லது அவரது வழக்கறிஞரோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
-->