""அதிமுகவுக்கு எதிராக விரைவில் எதிர் கட்சிகள் ஒன்றுபடும்"": மதிமுக
கோயம்புத்தூர்:
எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதிமுகவை எதிர்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றுமதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கண்ணப்பன் கூறினார்.
இதுகுறித்து கோயம்புத்தூரில் இன்று நிருபர்களிடம் கண்ணப்பன் கூறுகையில்,
தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அனைத்து வழிகளிலும் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு எதிரான, ஜனநாயக விரோத ஆட்சி நடத்தி வரும் அதிமுகவை எதிர்க்கும் நேரம் தற்போது வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.
அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டு அதிமுகவை எதிர்க்கும் காலமும் அவ்வளவு வெகுதூரத்தில் இல்லை. அதிமுக அரசுக்கு எதிராக விரைவில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்று சேரும். அந்த ஒருநிலைக்கு எதிர்க் கட்சியினர் விரைவில் தள்ளப்படுவார்கள்.
ஆனாலும் வரும் சாத்தான்குளம் இடைத் தேர்தலிலேயே இது நடக்குமா என்பதை என்னால் கூற முடியவில்லை.ஏனென்றால் தற்போது குழப்பமான அரசியல் சூழ்நிலையே நிலவுகிறது.
இருந்தாலும் இத்தொகுதியில் அதிமுகவுக்கு எதிராக பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்புக்களும் இல்லை.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம் என்பது குறித்து வரும் 26ம் தேதிசென்னையில் நடைபெறவுள்ள மதிமுக செயற்குழுக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என்றார் கண்ணப்பன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுமா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "இது குறித்து நான்எதுவும் கூற முடியாது. திமுகதான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்" என்றார் கண்ணப்பன்.
"மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஒரு கோடி கையெழுத்து பெறப்பட்டபடிவங்களின் நகல்களை வரும் 22ம் தேதி பிரதமர் வாஜ்பாயிடமும், 23ம் தேதி ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமிடமும் ஒப்படைப்போம்" என்றும் கண்ணப்பன் கூறினார்.
-->