விவசாயிகள் தற்கொலைகளுக்கு இடையே நாளை கூடுகிறது சட்டமன்றம்: அனல் பறக்கும்
சென்னை:
விவசாயிகள் தற்கொலை, சாத்தான்குளம் இடைத் தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே தமிழக சட்டமன்றம் நாளை கூடுகிறது.
இதனால் சட்டமன்றக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சபாநாயகர் காளிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் என்பதால் ஆளுநர் ராம்மோகன் ராவில் உரையுடன் நாளை காலை 11 மணிக்கு சட்டமன்றம்கூடும். இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் திட்டங்களை ஆளுநர் தனது உரை மூலம் விளக்குவார்.
இதன் பின்னர் அவை ஒத்தி வைக்கப்படும். நாளை மறுதினம் அவை கூடியவுடன் சாத்தான்குளம் எம்.எல்.ஏ. மணிநாடாரின் மறைவுக்குஇரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவை ஒத்தி வைக்கப்படும்.
பின்னர் திங்கள்கிழமை அவை கூடும். அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும்.விவாதங்களுக்கு முதல்வர் பதில் தருவார். அத்துடன் இந்த குறுகிய கால சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிவடையும்.
இடையே கேளிக்கை வரி, ஹோட்டல்களுக்கான வரி ஆகியவற்றில் திருத்தம் செய்து கொண்டு வரப்பட்டுள்ள மசோதாக்களும் நிலத்தடி நீர்பாதுகாப்பு குறித்த மசோதாவும் நிறைவேற்றப்படும் என்றார்.
இந்தக் கூட்டத் தொடர் ஒரு வார காலம் நடக்கும் என்று தெரிகிறது.
காவிரியில் நீர் இல்லாமல் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து வரும் நிலையில் இக் கூட்டம் நடக்கிறது. அரசின் இலவச உணவுத்திட்டத்தால் விவசாயிகள் தட்டு ஏந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் நடக்கும் இக்கூட்டத்தில் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும்.
இதனால் கூட்டத் தொடர் மிகப் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->