கத்தாரில் அத்வானிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு
தோகா:
கத்தார் நாட்டுக்குச் சென்ற இந்தியத் துணைப் பிரதமர் அத்வானிக்கு சிவப்புக் கம்பளத்துடன் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்றிரவு இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தில் அத்வானி அங்கு சென்றார். முதலில் திட்டமிட்டபடி இன்று காலை தான்அத்வானி கத்தார் செல்ல இருந்தார்.
ஆனால், கத்தார் அரசு 1 பில்லியன் முதலீட்டில் துவங்கியுள்ள கத்தார் பெட்ரோலிய ரசாயன ஆலையின் திறப்பு விழாவில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு கத்தார் அரசர் ஷேக் ஹமத் பின் கலிபா அல்-தானி கேட்டுக் கொண்டதால் நேற்றிரவே அங்குசென்றார்.
இரவு நடந்த பெட்ரோலிய ஆலையின் திறப்பு விழாவில் அத்வானி கலந்து கொண்டார். திறப்பு விழா முடிந்தவுடன் அத்வானிக்கு அந்தஆலையை அரசர் ஷேக் ஹமத் சுற்றிக் காட்டினார். பின்னர் இருவரும் இணைந்து உணவருந்தினர். அப்போது கத்தாரில் இருந்து சமையல்எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்வது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
முன்னதாக இரவில் தோகா சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த அத்வானியை அந் நாட்டுத் துணைப் பிரதமர் ஷேக் முகம்மத் பின்கலிபா அல்-தானி வரவேற்று அழைத்துச் சென்றார். துணைப் பிரதமாரான பின்னர் அத்வானி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப்பயணம் இது.
இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் தலைவராக உள்ள கத்தார் பல நேரங்களில் இந்தியாவுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இஸ்லாமிநாடுகள் அமைப்பு பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிலை எடுக்கும்போதெல்லாம் கத்தார் அதை தவிர்த்துள்ளது.
மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அதை முதலில் கண்டித்த இஸ்லாமிய நாடு கத்தார் தான்.
இப்போது குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்வது குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தவும் கத்தார் முன் வந்துள்ளது.
இன்று கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகம்மத் பின் கலிபா அல் தானி, துணைப் பிரதமர் அத்வானியை சந்தித்துப்பேசினார். அப்போது ஈராக்கில் போர் மூண்டாலும் கத்தாரில் உள்ள இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்போம் என அத்வானியிடம்அவர் உறுதியளித்தார்.
கத்தாரில் இப்போது 1,72,878 இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 20,000 இந்தியர்கள் அங்குசென்றுள்ளனர். கத்தாரின் மொத்த மக்கள் தொகையே 6 லட்சம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் பயணத்தை முடித்துக் கொண்டு அத்வானி பிரான்ஸ் செல்ல இருக்கிறார்.
-->