காவிரி: திமுக-- அதிமுக மோதலால் கடும் அமளி- சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை:
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயரைச் சுற்றி நின்று திமுகஉறுப்பினர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
ஆளுநர் உரை தமிழில் வாசிக்கப்படாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்த திமுகவினர், சிறிது நேரம் கழித்துமீண்டும் சபைக்குள் வந்தபோது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பதுதொடர்பான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அதிமுக உறுப்பினரான சிவசாமி பேசியபோது, முன்பு திமுக அரசு உறுதியான, உருப்படியான நடவடிக்கைகள்எதுவும் எடுக்காத காரணத்தினால்தான் காவிரிப் பிரச்சனை இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
இரு தரப்பிலும் பேசி காவிரிப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறிக் கூறியே திமுக காவிரிப்பிரச்சனையை நன்றாக வளர்த்து விட்டது. ஆனால் அதிமுகதான் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று தமிழக விவசாயிகளுக்கு நீதி கிடைக்கச் செய்தது என்றும் சிவசாமி கூறினார்.
இந்தப் பிரச்சனையைப் பற்றி இப்போது பேச வேண்டாம் என்று எதிர்க் கட்சித் துணைத் தலைவரான துரைமுருகன்கூறினார்.
ஆனால் அப்போது குறுக்கிட்ட நிதி அமைச்சர் பொன்னையன், பழைய ஆதாரங்களை எல்லாம் சுட்டிக் காட்டி,காவிரி விவகாரத்தில் இரு தரப்பிலான பேச்சுவார்த்தையே சிறந்தது என்று கடந்த 1968ம் ஆண்டிலிருந்தே திமுககூறி வந்திருப்பதாகக் கூறினார்.
அப்போதே திமுக நீதிமன்றத்தை நாடியிருந்தால் இப்போது காவிரி டெல்டா விவசாயிகள் இவ்வளவு சிரமங்களைஅனுபவித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் பொன்னையன் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவும் அப்போது குறுக்கிட்டு, காவிரி விவகாரம் தொடர்பாக 1924ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தைமீண்டும் புதுப்பிக்க கடந்த 1974ம் ஆண்டு கருணாநிதி தவறி விட்டார். அதனால்தான் இவ்வளவு குழப்பங்களும்நடந்துள்ளன என்றார்.
இதை துரைமுருகன் கடுமையாக மறுத்தார். காவிரி நீரைப் பகிர்வது தொடர்பான ஒப்பந்தம் 1974ல்காலாவதியாகிவிட்டது என்று திமுகவோ, அதன் தலைவர் கருணாநிதியோ எப்போதுமே கூறவில்லை. அதிமுகஅரசுதான் தற்போது இந்த விவகாரத்தைத் தேவையில்லாமல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று பெரும்பிரச்சனையாக்கி விட்டது என்றார்.
இதையடுத்து மற்ற திமுக எம்.எல்.ஏக்களும் துரைமுருகன் கூறியதை ஆதரித்து கோஷம் எழுப்பினர். உடனேஅதிமுக உறுப்பினர்களும் பதிலுக்குச் சத்தம் போட்டனர்.
இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. திமுகவினரும் அதிமுகவினரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர்.
அப்போது அதிமுக உறுப்பினர்களை நோக்கி திமுகவினர் பாய்ந்து சென்றனர். சபையின் மையப் பகுதி வரைஅவர்கள் கோபத்துடன் கத்தியவாறே முன்னேறிச் சென்றனர்.
இதைப் பார்த்ததும், அவர்களைத் தங்கள் இருக்கைகளுக்குப் போகுமாறு காளிமுத்து கூறினார். ஆனால் அவர்கூறியதை திமுகவினர் கண்டுகொள்ளவே இல்லை. சபாநாயரின் இருக்கையை சூழ்ந்து நின்று அரசுக்கு எதிராககோஷம் போட்டனர்.
கடும் கூச்சலுக்கு இடையிலும் நேரம் செல்லச் செல்ல அமளி அதிகரித்துக் கொண்டே இருந்தது. காவிரி நதி நீர்பங்கீட்டு ஒப்பந்தத்தை திமுக அரசு புதுப்பிக்காதது ஏன் என்று ஜெயலலிதாவும் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்.
"இதன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்து விட்டது. பெரும் தவறைஇழைத்து விட்டது. இந்த வரலாற்றை மாற்றியா எழுத முடியும்?" என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.அப்போது அவருடைய குரல் கடுமையாக ஒலித்தது.
ஆனால் திமுக எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவுக்கும் அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டேஇருந்தனர். இதனால் அவையில் அமளி தொடர்ந்தது.
இந்நிலையில் அவை முடிவடையும் நேரமும் நெருங்கி விட்டதைக் கவனித்த காளிமுத்து, இன்று முழுவதும் சபைஒத்திவைக்கப்படுவதாகக் கூறிவிட்டு வெளியேறினார்.
நாளை மீண்டும் சட்டசபை கூடும்போது, காவிரிப் பிரச்சனையை திமுக மீண்டும் நிச்சயம் கிளப்பும் என்று தெரிகிறது.
-->