கீழாநெல்லி, நித்திய கல்யாணிக்கு காப்புரிமை பெற தமிழகம் திட்டம்
சென்னை:
கீழாநெல்லி, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைகளுக்கு சர்வதேச அளவில் காப்புரிமை (patent) பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசின் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இத் தகவலை நலத்துறை அமைச்சர் செம்மலை சட்டசபையில்தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கீழாநெல்லி மஞ்சள் காமாலை நோய்க்கு மிகச் சிறந்த இயற்கை மருந்தாகும். அதே போல நித்திய கல்யாணி புற்றுநோயை குணமாக்கும் திறன் படைத்தது. இந்த மூலிகைகளை பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்து அதைமருந்தாகத் தயாரித்து மீண்டும் இந்தியாவிலேயே கொண்டு வந்த பெரும் விலைக்கு விற்கின்றன.
இதைத் தடை செய்யவும் இந்த மூலிகைகள் மீதான நம் உரிமையை நிலைநாட்டவும் இவற்றுக்கு காப்புரிமை பெற முடிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் எழுதப்படும்.
ஏற்கனவே மஞ்சள், பாசுமதி, வேம்பு போன்ற நம் நாட்டு இயற்கை மருந்துகளுக்கும் உற்பத்திப் பொருள்களுக்கும் வெளிநாடுகள் பேடன்ட்பெற்றுவிட்டன. இதனால் விரைந்து கீழாநெல்லிக்கும் நித்திய கல்யாணிக்கும் காப்புரிமை பெறப்படும்.
வேலூர், தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் மேலும் 10 இடங்களில் மூலிகைப் பண்ணைகள் துவக்கப்படும் என்றார் செம்மலை.
-->