கோயம்புத்தூர் நக்கீரன் நிருபர் கைது: அடித்து இழுத்துச் சென்ற போலீஸ்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரைச் சேர்ந்த நக்கீரன் நிருபர் மகரன் என்ற கிருஷ்ணகுமார் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரைக் கைது செய்தனர். வீரப்பனால் 1998ம் ஆண்டில் பக்தவச்சலம் என்ற வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில்இந்த நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த பக்தவச்சலம் தன்னை நிருபர் என்று கூறிக் கொண்டு தனது நிருபர்களுடன் காட்டுக்குள் சென்றார். ஆனால், இவரை போலீஸ்உளவாளி என்று உறுதி செய்து கொண்ட வீரப்பன் கொன்றான். இவரது நண்பர்களை விரட்டிவிட்டான். பக்தவச்சலத்தின் உடலை காட்டுஎல்லையில் எறிந்துவிட்டு ஓடிவிட்டான் வீரப்பன்.
இந்த வழக்கில் நக்கீரன் நிருபர்களையும் இணைத்து தமிழக போலீசார் தொடர்ந்து தொல்லை தந்து வருகின்றனர்.
வீரப்பனை முதன்முதலில் பேட்டி கண்ட சிவசுப்பிரமணியத்தை இதே பக்தவச்சலத்தின் கொலையில் தொடர்புபடுத்தி சிறையில் போட்டுவதைத்த அதிமுக அரசு இப்போது அதன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்யவும் முயன்று வருகிறது.
இந் நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட நிருபர் மகரனை கிரைம் பிராஞ்ச் போலீசார் திடீரென கைது செய்துள்ளனர். இன்று காலை 5.30மணிக்கு கோணவாய்க்கால் பாளையத்தில் உள்ள மகரனின் வீட்டுக்கு சி.பி.சி.ஐ.டியின் டி.எஸ்.பி. தலைமையிலான குழு சென்றது.
பின்னர் அவரைக் கைது செய்து அடித்து இழுத்துச் சென்றது. இந்த டி.எஸ்.பி. வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படையின்அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவசுப்பிரமணியம் அளிக்க வாக்குமூலத்தை வைத்தே மகரனையும் கைதுசெய்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறுகின்றனர்.
இப்போது மகரன் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரியவில்லை. ரகசிய இடத்தில் அவரை போலீசார் வைத்துள்ளனர். இன்றுமாலை அவரை கோவை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துவர் என்று தெரிகிறது.
வீரப்பனுடன் நக்கீரன் ஆசிரியர் கோபாலைத் தொடர்புபடுத்தும் போலீசாரின் திட்டத்தில் ஒரு பகுதியாகத் தான் இந்தக் கைதுநடந்திருப்பதாக நிருபர்கள் கருதுகின்றனர்.
தனது நிருபர் கைது செய்யப்பட்டது மட்டுமின்றி அவர் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளதற்கு நக்கீரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு தந்தியும் அனுப்பியுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றத்துக்கும் இந்தக் கைது குறித்த அவசர தகவலை நக்கீரன் அனுப்பியுள்ளது.
-->