அரசு ஊழியர் ஓய்வூதியத்தில் கை வைக்கும் அரசு
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்குப் பின் மின் கட்டண உயர்வு நிச்சயம் என்றாகிவிட்ட நிலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின்பென்சனையும் குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி இந்த அதிரடி நடவடிக்கை அமலுக்கு வரஉள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்களின் பல சலுகைகள் பறிக்கப்பட்டுவிட்டன. விருப்ப ஓய்வுத் திட்டம் என்றபெயரில் கட்டாய ஓய்வில் செல்ல வேண்டிய நிலைக்கு பல ஊழியர்களும் தள்ளப்பட்டு வருகின்றனர்.
மேலும் பஸ்கள் தனியார்மயமாக்கல், துறைகளைக் குறைத்தல், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் என நிதி நெருக்கடியால்பலவிதமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
சமீபத்தில் குறைக்கப்பட்ட கேளிக்கை வரியை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மிக விரைவில் சினிமா கட்டணங்கள் பல மடங்குஉயரும். நிதி ஆதாரத்தை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
இந் நிலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் பென்சனிலும் கை வைக்கப் போகிறது தமிழக அரசு. பணியில் இருந்தபோது கடைசியாகவாங்கிய ஊதியத்தில் பாதியைத் தான் இப்போது பென்சனாக அரசு ஊழியர்கள் வாங்கி வருகின்றனர். கடைசி நேரத்தில் பதவி உயர்வுபெற்றால் அதனால் ஓய்வூதியமும் உயரும். இனி இந்த கடைசி நேர பதவி உயர்வுக்கு ஏற்ப கூடுதலாக ஓய்வூதியம் தருவதை நிறுத்த அரசுமுடிவு செய்துள்ளது.
ஓய்வு பெறும் முன் கடைசி 12 மாதங்கள் வாங்கிய சம்பளத்தைக் கூட்டி அதில் சராசரியாகப் பாதியை மட்டுமே ஓய்வூதியமாக வழங்குவதுஎன அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும் முழுப் பென்சன் வாங்க வேண்டுமானால் 30 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும் என்ற விதியும் மாற்றப்படுகிறது. இந்தவரம்பை 33 ஆண்டுகளாக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் முழுப் பென்சன் பெறுவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
மேலும் வரும் மார்ச் 31ம் தேதிக்குப் பின் ஓய்வு பெறுபவர்கள், விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு பல சலுகைகள் பறிக்கப்படும் என்றும்எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் விருப்ப ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையை மார்ச்சுக்குள் பல மடங்கு அதிகரிக்க அரசுதிட்டமிட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சாத்தான்குளம் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பின்னர் தான் அறிவிக்கப்படும் எனகோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.
-->