மைசூர் தமிழ்க் குடும்பங்களை ஒன்றிணைக்க நட்புத் திருவிழா: தமிழ்ச் சங்கம் முயற்சி
மைசூர்:
மைசூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நட்புத் திருவிழா நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தைவிட்டு வந்து மைசூரில் குடியேறி வாழும் தமிழர் குடும்பங்களுக்கு இடையே நட்பை உருவாக்கும் முயற்சியாக இந்த விழாநடத்தப்படுகிறது.
இது குறித்து மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜகோபால் கூறியதாவது:
மைசூரில் வாழும் அனைத்துத் தமிழர் குடும்பங்களையும் ஒருவரோடு ஒருவர் அறிமுகப்படுத்திவிடும் முயற்சி தான் இது.தமிழகத்தைவிட்டு இங்கு வாழ்ந்துவரும் பெரும்பான்மையான தமிழர்கள் தனிமையில் உள்ளனர்.
இவர்களுக்கு மைசூரில் சொந்த பந்தங்கள் இல்லை. மகனுக்கோ, மகளுக்கோ திருமண வயது வந்தால் வரன் தேடி தமிழகத்துக்குத் தான் ஓடவேண்டிய நிலை உள்ளது. ஆனால், மைசூரிலேயே பெரும் எண்ணிக்கையில் மாப்பிள்ளைகளும் மணப் பெண்களும் உள்ளனர்.
உரிய அறிமுகமும் நட்பும் இல்லாததால் தான் இங்குள்ள தமிழர்கள் தனித்தனியே தீவுகள் மாதிரி வாழ்கிறார்கள். இந்தத் தனிமையைப்போக்கவும், இங்கேயே அவர்களுக்கு புதிய உறவுகளை ஏற்படுத்தித் தரவும் தான் நட்புத் திருவிழாவை தமிழ்ச் சங்கம் நடத்த உள்ளது.
ஒரு நாள் முழுவதும் தமிழச் சங்கத்திலேயே கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், கருத்துரைகளுடன் இந்த விழா நடக்கும்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் சங்கத்தின் வளர்ச்சி நிதிக்கு உதவும் வகையில் டிக்கெட் பெற்றுக் கொள்ள வேண்டும். 12ம் தேதி வரைஇந்த டிக்கெட்டுகள் விற்கப்படும் என்றார்.
சங்கத்தின் செயலாளர் புகழேந்தியும் உடன் இருந்தார்.
-->