செல்வராஜ் கொலை வழக்கு: தூக்கு, ஆயுள் தண்டனை பெற்ற 8 பேரை விடுவித்தது உயர் நீதிமன்றம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனைபெற்ற 4 அல்-உம்மா தீவிரவாதிகளையும் ஆயுள் தண்டனை பெற்ற வேறு 4 பேரையும் சென்னை உயர் நீதிமன்றம்இன்று விடுதலை செய்தது.
கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதிபணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்திய செல்வராஜ் அபராதம் விதித்தார். இதையடுத்து அவருக்கும் மோட்டார் சைக்கிளில்வந்த 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த 3 வாலிபர்களும் பெரும் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்தனர். காவலர்செல்வராஜை நடுரோட்டிலேயே வைத்து கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றனர்.
இதையடுத்து ஏற்பட்ட வன்முறை மதக் கலவரமாக மாறியது. பஸ்கள் எரிக்கப்பட்டன, கடைகளும் வீடுகளும்சூறையாடப்பட்டன. இந்த வன்முறையை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர்கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக கோயம்புத்தூரில் 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்நடத்தப்பட்டது. அதில் 58 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
செல்வராஜ் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தக்கொலையில் தொடர்புடைய அல்-உம்மாவின் தலைவர் பாட்சாவின் மகன் சித்திக் அலி, அல்-உம்மா பொதுத்செயலாளர் முகம்மத் அன்சாரி உள்பட 9 பேரைக் கைது செய்தனர்.
இதில் ஷாகுல் ஹமீத் என்பவர் சிறையிலேயே இறந்துவிட்டார். மற்ற 8 பேர் மீதும் கோவை இரண்டாவது விரைவுநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
அதன் பின்னர் கடந்த டிசம்பர் 23ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி பிரேம்குமார், இவர்களில் 4 பேருக்கு தூக்குத்தண்டனையும், மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கினார்.
முக்கிய குற்றவாளிகளான முகம்மது சபி, அபா, ஆசிக், அபுதாகிர் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனையும்,கொலைக்கு உடந்தையாக இருந்த சித்திக் அலி, முகம்மது அன்சாரி, சம்சுதீன், தடா அஸ்லாம் ஆகிய 4 பேருக்குஆயுள் தண்டனையும் தலா ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி பிரேம்குமார்.
மேலும் இந்தத் தண்டனையை எதிர்த்து இவர்கள் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்ய 30 நாட்கள்அவகாசம் தருகிறேன் என்றும் கூறினார் நீதிபதி.
இதையடுத்து தண்டனை வழங்கப்பட்ட எட்டு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனவரி மாத இறுதியில்அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஆர். பாலசுப்பிரமணியம் மற்றும் நீதிபதி என். தினகர் ஆகியோர்அடங்கிய உயர் நீதிமன்ற பெஞ்ச் இம்மனுவை விசாரித்தது.
இந்த 8 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பதால் கோயம்புத்தூர் விரைவுநீதிமன்றம் வழங்கி தீர்ப்பு தவறு என்றும், அவர்களை விடுதலை செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-->