அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி:
அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலத்தைச் சுற்றியுள்ள 67 ஏக்கர்நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்திடம் ஒப்படைக்கவும், அங்கு மீண்டும் பூஜைகள் நடத்த அனுமதிக்கக் கோரியும்மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.
விசாரணைகள் முடித்தவுடன் இந்த வழக்கில் தீர்பை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தில் பூஜைகள் நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டுதடை விதித்தது.
இந்த நிலத்தை வி.எச்.பி. மீண்டும் தன்னிடம் தரக் கோருவதாலும் அங்கு பூஜைகள் நடத்த அனுமதி கோருவதாலும்உச்ச நீதிமன்றத்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அனுகியது. நிலத்தை மீண்டும் வி.எச்.பியிடம் தரவும்அங்கு பூஜைகள் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று கோரியது.
மத்திய அரசு வி.எச்.பிக்கு ஆதரவாக செயல்படுவதாக அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியமும், பாபர் மசூதிகமிட்டியும் கூறியுள்ளன.
நீதிபதி ராஜேந்திர பாபு தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் இந்த வழக்குவிசாரணையை இன்று எடுத்துக் கொண்டது.
அப்போது பேசிய மத்திய அரசின் வழக்கறிஞர் கீர்த்தி ராவல், 2.77 ஏக்கர் நிலத்தைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தைமீண்டும் அதன் உரிமையாளர்களான வி.எச்.பியிடம் தர அனுமதிக்க வேண்டும் என்றார்.
அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், மசூதி இடிக்கப்பட்ட பிறகுஅந்த வழக்கை விசாரணை நடத்த வசதியாக இந்த சர்ச்சைக்குரிய நிலமும், அதைச் சுற்றியுள்ள நிலமும் மத்தியஅரசால் கையகப்படுத்தப்பட்டன. இங்கு எந்த வழிபாடும் நடத்த அனுமதிக்கப்படவில்லை. இந்த வழக்குவிசாரணை இன்னும் அலகாபாத் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில் திடீரென நிலத்தை ஏன் வி.எச்.பியிடம் தர மத்திய அரசு முயல வேண்டும்? நிலத்தை அவர்களிடம் தரவேண்டிய அளவுக்கு அடிப்படை நிலைமையில் என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது?
அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை இந்த வழக்கில் தொடர்புடைய நிலத்தை யாரிடமும் தரவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இதையடுத்துப் பேசிய கீர்த்தி ராவல், பிரச்சனைக்குரிய இடம் குறித்து அரசின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.அதைச் சுற்றியுள்ள நிலத்தைத் தான் விடுவிக்கக் கோருகிறோம். சர்ச்சைக்குரிய இடத்தில் எந்த மாற்றமும் ஏற்படமத்திய அரசு அனுமதிக்காது என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதிகள், இதே போன்ற உத்தரவாதம் தான் 10 ஆண்டுகளுக்கு முன்பும் உத்தரப் பிரதேசஅரசால் நீதிமன்றத்துக்குத் தரப்பட்டது. ஆனால், அங்கு என்ன நடந்தது? அரசின் உத்தரவாதம் என்ன ஆனதுஎன்பது எல்லோருக்கும் தெரியும் (பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தான் நீதிபதிகள் இவ்வாறு குறிப்பிட்டனர்)என்றனர்.
இதையடுத்துப் பேசிய கீர்த்தி ராவல், 1994ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நிலத்தை யாரிடம்வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தான் நிலத்தைவி.எச்.பியிடம் தர மத்திய அரசு நினைக்கிறது என்றார்.
இஸ்லாமிய சன்னி வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிரான சித்தார்த் சங்கர் ராய் பேசுகையில், அயோத்திநிலத்தை ஒருதலைப்பட்டசமாக மத்திய அரசு யாரிடமாவது ஒப்படைத்தால் வெடிகுண்டின் மீது தீக்குச்சியைக்கொழுத்திப் போட்டது மாதிரி ஆகிவிடும். மீண்டும் மதக் கலவரம் வெடிக்க வேண்டும் என்று அரசே விரும்புகிறதாஎன்றார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
அயோத்தியில் ராமர் கோவிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதா என்பது குறித்து ஆராய அங்குஅகழ்வாராய்ச்சி நடத்த மத்திய தொல்பொருள்துறைக்கு நேற்று தான் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications