காதலர்களை குறிவைத்து "பைக்" திருடிய கல்லூரி மாணவர்கள்
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளைத் திருடி விற்று வந்த 2 கல்லூரிமாணவர்கள் உள்பட 5 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
மெரினா கடற்கரைக்கு காற்று வாங்க வருவோர் நிறுத்தி வைத்து விட்டுச் செல்லும் பைக்குகள் அடிக்கடி காணாமல்போய்க் கொண்டிருந்தன.
இது தொடர்பாக கடற்கரை காவல் நிலையத்திற்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து பைக் திருடர்களைப்பொறிவைத்துப் பிடிக்க போலீஸார் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கடற்கரை அருகே ஒரு பைக்கை போலீஸார் நிறுத்தி வைத்து விட்டு மறைந்து நின்றனர்.
அப்போது ஒரு இளைஞன் அங்கு வந்து அந்த பைக்கை மாற்றுச் சாவி போட்டு எடுத்துச் செல்ல முயன்றான்.உடனே அங்கு மறைந்து நின்ற போலீஸார் அவனைப் பாய்ந்து சென்று பிடித்தனர்.
அந்நபரிடம் விசாரணை நடத்தியதில் அவனது பெயர் நஸீர் என்றும், ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவன்என்றும் தெரிய வந்தது.
அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.5லட்சம் மதிப்புள்ள ஒன்பது பைக்குகளையும் போலீசார் கைப்பற்றினர்.
காதலர்கள் தங்களையும் மறந்து கடற்கரையில் இருக்கும்போது அவர்களுடைய பைக்குகளை "அபேஸ்" செய்துகொண்டு இந்தத் திருட்டுக் கும்பல் ஓடி விடும் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஐவரில் இரண்டு பேர் திருவண்ணாமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->