பிரதமர் பதவியில் 5 ஆண்டு நிறைவு செய்த வாஜ்பாய்
டெல்லி:
வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்று நாளையுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமர்தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் பதவி வகித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 1996ம் ஆண்டு அவர் முதல் முறையாக பிரதமராகப் பதவியேற்றார். ஆனால் அந்த ஆட்சி 13 நாட்கள்மட்டுமே நீடித்தது.
இதைத் தொடர்ந்து 1998ம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பிரதமரானார் வாஜ்பாய். ஆனால் இந்த ஆட்சியும்அடுத்த 13 மாதங்களிலேயே கவிழ்ந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி ஆகியோர் கூட்டணியிலிருந்து விலகியதால் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.
ஆனாலும் தேர்தல் நடக்கும் வரை அவரே பிரதமராக இருந்தார். 1999ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில்பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. வாஜ்பாய் மூன்றாவதுமுறையாகப் பிரதமரானார்.
இந்நிலையில் வாஜ்பாய் பிரதமராகி நாளையுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. 50 ஆண்டு அரசியல்அனுபவத்துடன் 20க்கும் மேற்பட்ட கட்சிகளை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்.
தீவிர இந்து மதக் கட்சியான பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் பலமுறை ஆட்டம் கண்டது. அயோத்தி,சவப் பெட்டி ஊழல், தெஹல்கா ஆயுத பேர, குஜராத் மதக் கலவரம், பொடா, தொலைத் தொடர்பு ஊழல் எனபிரச்சனைகள் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்தபோதும் அதை சமாளித்துவிட்டார் வாஜ்பாய்.
பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் வெற்றி, காஷ்மீர் தேர்தல் ஆகியவை வாஜ்பாயின் மிகப் பெரியவெற்றிகளாகக் கருதப்படுகின்றன.
இவற்றைத் தவிர நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குஎதிராக பா.ஜ.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் வாஜ்பாய் பிரதமர் பதவியில் நீடிக்க பெரிதும் உதவின.
துணைப் பிரதமர் அத்வானி, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி அளவுக்கு மதவிஷயங்களில் தீவிர ஈடுபாடு காட்டாமலே இருந்து வருகிறார் வாஜ்பாய். அவர் தொடர்ந்து பிரதமர் பதவியில்நீடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் சுதந்திர இந்தியாவில் இதுவரை காங்கிரஸ் பிரதமர்கள் மட்டுமே ஐந்துஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் பதவியில் இருந்துள்ளனர்.
ஜனதா கட்சியைச் சேர்ந்த சரண் சிங் 3 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார். சந்திரசேகர் 4 மாதங்களுக்கேபிரதமராக நீடித்தார். அதேபோல் வி.பி. சிங், தேவ கெளடா மற்றும் ஐ.கே. குஜ்ரால் ஆகியோரும் 11 மாதங்கள்மட்டுமே பிரதமர் நாற்காலியில் இருக்க முடிந்தது.
ஆனால் காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரை பிரதமர் பதவியில்நீடித்திருப்பது இதுவே முதல் முறை. வாஜ்பாய்க்கு அந்தப் பெருமை கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications