மாற்றி அமைக்கப்படும் எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகள்
சென்னை:
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள், சட்டப் பேரவைத் தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
இந்தப் பணி தொடங்கிவிட்டதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கூறினார்.
இப்போது ஒரு சட்டப் பேரவை தொகுதி இரு மாவட்டங்களில் வருவது, ஒரே பஞ்சாயத்தின் ஒரு பகுதி ஒரு தொகுதியிலும் இன்னொருபகுதி அடுத்த தொகுதியிலும் வருவது போன்ற பிரச்சனைகள் உள்ளன.
இதனால் நிர்வாகரீதியில் பல பிரச்சனைகள் வருகின்றன. இதை மாற்றி அமைத்து ஒரு சட்டப் பேரவைத் தொகுதி ஒரே மாவட்டத்தின் கீழ்வருமாறும், பஞ்சாயத்தின் அனைத்துப் பகுதிகளும் ஒரே எம்.எல்.ஏ. தொகுதிக்குள் வருமாறும் மாற்றப்படும்.
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இந்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது.
அதே போல சில தொகுதிகளில் மிக அதிக மக்களும் பக்கத்து தொகுதியில் குறைவான மக்களும் உள்ளனர். இதுவும் சமப்படுத்தப்படும்என்றார் பழனிச்சாமி.
எந்தத் தேர்தல் என்றாலும் கிராமங்களில் தான் அதிக அளவில் வாக்குப் பதிவு நடப்பதாகவும் நகர்ப் பகுதிகளில் வாக்குப் பதிவு வர வரகுறைந்து கொண்டே வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக சென்னை நகரில் வாக்களிப்போர் எண்ணிக்கை 35 சதவீதத்துக்கும்கீழாகவே உள்ளதாகவும் கூறினார்.
-->