நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாளையே பட்ஜெட்டும் தாக்கல்செய்யப்படுகிறது.
நாளை காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பொன்னையன் 2003-04ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை(பட்ஜெட்) தாக்கல் செய்கிறார்.
இந்தக் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சபையின் அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவுசெய்யும். இருப்பினும் மே மாதம் வரை கூட்டத் தொடர் நீடிக்கும் என்று தெரிகிறது.
இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது உள்ளிட்ட பல்வேறு சூடானபிரச்சினைகள் இருப்பதால் இந்தக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதியை கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி கோரி அக்கட்சி சார்பில்போராட்டம் நடத்தப்படலாம் என்றும் தெரிகிறது.
காளிமுத்து வேண்டுகோள்:
இதற்கிடையே இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றுஅனைத்துக் கட்சிகளையும் சபாநாயகர் காளிமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
நிதி அமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிறகு, எனது அறையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். சட்டசபை தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும்என்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.
மே 15ம் தேதி வரையிலும் கூட்டத் தொடர் நடைபெறலாம். நீண்ட தொடராக இது இருக்கும்.
சட்டசபையில் மோதல்கள் எழாமல் சுமூகமான முறையில் கூட்டத் தொடரை நடத்தி முடிக்க அனைத்துக் கட்சித்தலைவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கட்சியின் முன்னணித் தலைவர்களின் சொல் கேட்டு மற்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டால்பிரச்சனையே இல்லை.
திமுக உறுப்பினரான பரிதி இளம்வழுதி விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதித்துதான் முடிவு செய்ய முடியும்.நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது.
என் உதவியாளர் மீது நடந்த கத்திக் குத்துத் தாக்குதல் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவத்திற்கும் எனது பிற உதவியாளர்கள், ஊழியர்கள் மாற்றப்பட்டதற்கும் எந்தவித தொடர்பும்கிடையாது. இது வழக்கமான மாறுதல்தான் என்றார் காளிமுத்து.
-->