தப்ப முயன்ற தமிழ் தீவிரவாதி ராஜாராமன் சுட்டுக் கொலை: மர்ம கார் சிக்கியது
சென்னை:
சென்னையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற தமிழர்விடுதலைப் படையின் தலைவரான ராஜாராமன் சக தீவிரவாதிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைத்தப்ப வைக்க முயன்ற சரவணன் என்ற தமிழ் தீவிரவாதியைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ராஜாராமனை கடந்த டிசம்பர் மாதம் சென்னை-கோடம்பாக்கத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் அடிக்கடி விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு வந்தார்.
அதேபோலவே நேற்றும் ராஜாராமனைப் பலத்த காவலுடன் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர். அவருடன் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசாரும் பாதுகாப்புக்காகச் சென்றனர்.
விசாரணை முடிந்ததும் சைதாப்பேட்டையிலிருந்து மத்திய சிறைக்கு ராஜாராமனைப் போலீசார் ஜீப்பில் அழைத்துவந்து கொண்டிருந்தனர்.
இரவு சுமார் 7 மணிக்கு கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு பாலத்தில் சென்று கொண்டிருந்தபோதுதிடீரென்று போலீஸ் ஜீப்பை ஒரு குவாலிஸ் கார் வழிமறித்தது. சிறிது தடுமாறிய போலீசார் ஜீப்பை நிறுத்துவதற்குள்குவாலிஸ் காரில் இருந்தவர்கள் போலீசாரை நோக்கி சராமாரியாகச் சுட ஆரம்பித்தனர்.
இதில் ஜீப்பின் முன் பக்கக் கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கிச் சிதறியது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ராஜாராமன் ஜீப்பிலிருந்து இறங்கித் தப்பி ஓட முயற்சித்தார்.
அப்போது காரில் வந்தவர்கள் போலீசார் மீது கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தனர். இதில்ராஜாராமன் குண்டுகள் பாய்ந்து அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
இதற்கிடையே சுதாரித்துக் கொண்ட போலீசார் காரில் இருந்தவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதில் ஒரு தீவிரவாதி குண்டு பாய்ந்து சரிந்தான். சம்பவ இடத்திலேயே இறந்த அவனுடைய பெயர்சரவணன் என்று தெரிய வந்துள்ளது.
அவன் இறந்து விழுந்ததும் காரில் வந்த மற்ற தீவிரவாதிகள் காரை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்தக் கடும் துப்பாக்கிச் சண்டையில் இரண்டு அதிகாரிகள், இரண்டு கமாண்டோ போலீசார் உள்பட சில போலீசார்குண்டுக் காயம் அடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
மறுபக்கம், போலீசார் வேண்டுமென்றே ராஜாராமனைச் சுட்டுக் கொன்றுவிட்டு "குவாலிஸ் கார், அவரைத் தப்பவைக்க தீவிரவாதிகள் முயற்சி" என்று நாடகம் ஆடுவதாக சில மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
"வழக்கமாக சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து அண்ணா சாலை வழியாகத்தான் குற்றவாளிகளை மத்தியசிறைக்குப் போலீசார் கொண்டு செல்வார்கள். நேற்று மட்டும் ஏன் கோட்டூர்புரம் வழியாக சுற்றி வளைத்துக்கொண்டு சென்றனர்?" என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
"ஆனால் ராஜாராமனைக் கொண்டு சென்ற நேரம் "பீக் அவர்" என்பதால் அண்ணா சாலையில் போக்குவரத்துநெருக்கடி அதிகமாக இருக்கும். இதனால்தான் அவரைப் பத்திரமாக சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்என்பதற்காக கோட்டூர்புரம் வழியாகச் சென்றோம்" என்று போலீசார் கூறினர்.
குவாலிஸ் கார் சிக்கியது:
இதற்கிடையே ராஜாராமனைத் தப்ப வைக்க முயன்ற மர்ம கும்பல் பயன்படுத்திய குவாலிஸ் கார்சென்னை-தரமணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சண்டையில் ராஜாராமனும், சரவணனும் இறந்த பின்னர் அந்தக் காரில் தப்பியோடிய கும்பலைத் தேடும்பணியில் தனிப் போலீஸ் படைகள் ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில் தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் ஒரு குவாலிஸ் கார் அநாதையாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த சிலர் போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டதில், மர்ம கும்பல் பயன்படுத்திய கார்தான் அது என்பது தெரியவந்தது. கண்ணாடிகள் சிதறிய நிலையில் அந்தக் கார் நின்று கொண்டிருந்தது. அதைப் போலீசார் கைப்பற்றினர்.
நேற்று இரவு சம்பவம் நடந்த கோட்டூர்புரத்திலிருந்து தரமணி ஒருசில கி.மீ. தூரம்தான் உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. காரில் வந்த கும்பலைப் போலீசார் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->