அமெரிக்க படைகளுக்கு பெரும் உயிர் சேதம்: ஈராக்
பாக்தாத்:
பாக்தாதின் புறநகர்ப் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்கப் படைப் பிரிவுகளுக்கு பலத்த உயிர்ச் சேதம்ஏற்பட்டுள்ளது. இங்கு ஈராக்கியப் படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 6 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாக்தாதில் பல நடமாடும் கட்டுப்பாட்டு மையங்களை அமெரிக்க ராணுவம் அமைத்துள்ளது. ஒரு நடமாடும்மையத்தை ஈராக்கியப் படைகள் தாக்கியதில் இந்தச் சாவுகள் நடந்ததாகத் தெரிகிறது.
பாக்தாதுக்குள் அமெரிக்கப் படைகள் ஊடுருவியுள்ள நிலையில் ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் சைத் அல் சகாப்நிருபர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது:
இங்கு வந்து சாவதற்காகத் தான் அமெரிக்கப் படைகளை ஜார்ஜ் புஷ் அனுப்பி வைத்துள்ளான். இன்று காலைஅமெரிக்கப் படைகளுக்கு பெரும் உயிர்ச் சேதத்தை எங்களது படைகள் ஏற்படுத்தின. நாங்கள் நடத்திய ராக்கெட்தாக்குதலில் பல அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர். எத்தனை பேர் செத்தார்கள் என்று தெரியவில்லை.
தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறோம். ஈராக் முழுவதுமே இது போன்ற சுற்றி வளைத்துத் தாக்குதல் நடக்கும்.அல்-ரஷீத் ஹோட்டலோ அல்லது தகவல்துறை அமைச்சகக் கட்டிடமோ அமெரிக்கப் படைகள் வசம் இல்லை.அவை எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
அல் ஜசீரா தொலைக்காட்சி அமெரிக்காவுக்காக போராடுவதை விட்டுவிட்டு மக்களுக்கு ஆதரவாக செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்க பணத்துக்கு அல் ஜசீரா அடிமையாகிவிடக் கூடாது.
தொடர்ந்து நாங்கள் கொரில்லா போரில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது அப்பாவி மக்களை கொன்றுகுவித்துள்ள அமெரிக்கப் படைகளின் உயிர்களை வாங்குவோம்.
சதாம் சர்வதேச விமான நிலையத்தை அவர்கள் கைப்பற்றிவிட்டதாகக் கூறுவதும் பொய்ப் பிரச்சாரம் தான். அதுஎங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பொய்களைப் பரப்புவதும் கேவலமான செயல்களை செய்வதும்அமெரிக்காவுக்கு கைவந்த கலை. அதைத் தான் இங்கும் செய்து கொண்டிருக்கிறது என்றார் அல் சகாப்.
புறநகர்ப் பகுதியில்...
முதலில் பாக்தாதின் மத்தியப் பகுதியில் ஊடுருவி விட்டதாகக் கூறிய அமெரிக்கப் படைகளும் சி.என்.என்.தொலைக் காட்சியும் இப்போது அமெரிக்கப் படைகள் புறநகர்ப் பகுதியில் தான் உள்ளதாகக் கூறியுள்ளன.
புறநகர்ப் பகுதியில் பலத்த சண்டையில் இரு நாட்டுப் படைகளும் ஈடுபட்டுள்ளதாக சற்று நேரத்துக்கு முன்அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.
கொரில்லா போர் தொடரும்:
நேரடியாக அமெரிக்கப் படைகளை எதிர்ப்பது சாத்தியமில்லை என்பதால் சதாம் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.ஈராக்கியத் தரைப்படையை அமெரிக்கத் தரைப் படையைவிட அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தான் அதிகமாகத்தாக்கி வருகின்றன.
இந்த ஹை-டெக் அமெரிக்கப் படையை நேரடியாக எதிர்ப்பது எளிதல்ல என்பதால் தனது ராணுவத்தை மிகச்சிறிய குழுக்களாக சதாம் பிரித்துள்ளார். இந்தப் படைகள் பல மாதங்களுக்கு தொடர்ந்து அமெரிக்கப்படைகளைத் தாக்கும் என்று தெரிகிறது.
ராணுவ முகாமாய் மாறும் விமான நிலையம்:
இதற்கிடையே தங்களிடம் சதாம் சர்வதேச விமான நிலையம் பிடிபட்டுவிட்டதாகவும் அதை தங்களதுபடைகளுக்கான முக்கிய ராணுவத் தளமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கப் படைகள்கூறியுள்ளன.
இந்த விமான நிலையம் கடும் சண்டைக்குப் பின் நேற்று தங்களிடம் வீழ்ந்தாதக அமெரிக்கப் படைகள்கூறுகின்றன. இந்த விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை, பயணிகள் தங்கும் அறை, ரன் வே என அனைத்துப்பகுதிகளும் இப்போது அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் இந்த விமான தளத்தில் நேற்றுபோர் விமானம் தரையிறங்கியதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.