ஒரு வழக்கில் ஸ்டாலினுக்கு ஜாமீன்: விடுதலை ஆக முடியாது
சென்னை:
ராணி மேரிக் கல்லூரிக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்ததாகவும், காவலாளியைத் தாக்கியதாகவும் கைதுசெய்யப்பட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலினுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆனால், அவர் மீது போலீசாரைக் கொல்ல முயன்ற வழக்கையும் தமிழக அரசு பதிவு செய்துள்ளதால் இந்தவழக்கிலும் ஜாமீன் கிடைக்காத வரை அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாது.
ராணி மேரிக் கல்லூரிக்குள் நுழைந்த வழக்கில் ஸ்டாலின் தவிர மேலும் 5 திமுக எம்.எல்.ஏக்களுக்கும் ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது.
சென்னை 13வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் வெங்கட வரதன் அவர்களுக்கு இன்று ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டார். அவர்களை விடுவிப்பதால் விசாரணை பாதிக்கப்படும் என போலீஸ் தரப்பில் வாதாடப்பட்டது.ஆனால், அதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
கொலை வழக்கு:
இந் நிலையில் ஸ்டாலின் மீது கொலை முயற்சி வழக்கையும் போலீசார் புதிதாகப் பதிவுசெய்துள்ளனர்.
ராணி மேரி கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஸ்டாலினைக் கைது செய்வதற்காக போலீசார்அவருடைய வீட்டுக்குச் சென்றனர். அப்போது அவர் போலீசாரை கொலை செய்ய முயற்சித்ததாகத்தற்போது புதிய வழக்கு ஒன்று ஸ்டாலின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.சி. 307வது பிரிவின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு முதலாவது செசன்ஸ் நீதிமன்றத்தில் ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 21ம் தேதி நடக்கிறது.
ஸ்டாலினை சந்தித்த தயாளு:
இதற்கிடையே கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்டாலினை அவருடைய தாய் தயாளுஅம்மாள், மனைவி துர்கா ஆகியோர் சந்தித்தனர்.
இருவரும் சுமார் அரை மணி நேரம் ஸ்டாலினுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெளியேவந்த தயாளு அம்மாள் நிருபர்களிடம் கூறுகையில்,
ஸ்டாலின் அறையில் மின் விசிறி கூட பொருத்தப்படவில்லை. இதனால் வெப்பம் கடுமையாகஉள்ளது. நான் நன்றாக இருப்பதாக அப்பாவிடம் (கருணாநிதி) கூறி விடுமாறும் ஸ்டாலின்என்னிடம் தெரிவித்தார் என்றார் தயாளு அம்மாள்.
"தமிழகமே சிறைதான்":
ஸ்டாலினை முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகனும் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம்அவர் பேசுகையில், ஜெயலலிதா ஆட்சியில் தமிழகமே ஒரு பெரிய சிறையாக மாறி விட்டது.
ஜெயலலிதா ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரியுள்ள பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸின் கோரிக்கை குறித்து வரும் 24ம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்விவாதித்து முடிவெடுக்கப்படும்.
"நக்கீரன்" கோபால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் தானே முன் நின்று போராட்டம்நடத்தப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அதை அவர் நிச்சயம் செய்வார் என்றார்துரைமுருகன்.
ஹேபியஸ் கார்பஸ் மனு வாபஸ்:
இதற்கிடையே ஸ்டாலின் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏக்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரிதாக்கல் செய்யப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கைதான திமுக எம்.எல்.ஏக்களில் ஒருவரான ஹூசேன் என்பவரின் மகன் அப்துல் காதர்இம்மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஜாமீன் கோரி வெவ்வேறு நீதிமன்றங்களில் மனு தாக்கல்செய்திருப்பதால், ஹேபியஸ் கார்பஸ் மனுவை வாபஸ் பெறுவதாக அப்துல் காதர் உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அம்மனுவை ஏற்று, ஹேபியஸ் கார்பஸ் மனு மீதான விசாரணையைக் கைவிடுவதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.
-->