பாகிஸ்தானுடன் நட்பை விரும்பும் வாஜ்பாய்
ஸ்ரீநகர்:
"அண்டை நாடுகளுடன் நட்புறவு கொள்வதற்குத்தான் இந்தியா எப்போதும் விரும்பி வந்துள்ளது.ஆனால் அதற்குத் தகுந்தவாறு அந்த நாடுகளும் நடந்து கொள்ள வேண்டும்" என்று பிரதமர்வாஜ்பாய் கூறியுள்ளார்.
வாஜ்பாய் 2 நாள் பயணமாக இன்று காலை ஸ்ரீநகர் வந்து சேர்ந்தார். வந்ததும் ஸ்ரீநகர் விமானநிலையத்தை விரிவுபடுத்தும் பணிகளுக்கான அடிக்கல்லை வாஜ்பாய் நாட்டினார். இந்தப் பணிமுடிந்த பின்னர் ஸ்ரீநகர் விமான நிலையம் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையமாக மாறும் என்றுஅப்போது அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் ஆளுநர் சக்ஸேனா, முதல்வர் முப்தி முகமது சயீது, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா,விமானப் போக்குவரத் துறை அமைச்சர் சயீது ஷானவாஸ் ஹூசைன் உள்ளிட்டோர் இவ்விழாவில்கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் ஸ்ரீநகரில் நடந்த பிரம்மாண்டமான பேரணிப் பொதுக் கூட்டத்தில் வாஜ்பாய் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில்,
எந்த ஒரு பிரச்சனைக்கும் துப்பாக்கிக் குண்டு மூலம் தீர்வு காண முடியாது. ஒரு துப்பாக்கியால்ஒருவனைக் கொன்று விடலாம். ஆனால் அதே துப்பாக்கியை வைத்து அவனுடைய பசியைத் தீர்க்கமுடியுமா?
பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.
அண்டை நாடுகளுடன் நட்புறவு கொள்வதற்குத்தான் இந்தியா எப்போதும் விரும்பி வந்துள்ளது.ஆனால் அதற்குத் தகுந்தவாறு அந்த நாடுகளும் நடந்து கொள்ள வேண்டும்.
(எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால்தான் அந்நாட்டுடன்பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா பலமுறை கூறியுள்ளது).
ஈராக் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அனைத்து இடங்களிலும் போர் நீடிக்கவேண்டும் என்ற அவசியமே இல்லை (ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது போல் இந்தியாதங்களைத் தாக்கலாம் என பாகிஸ்தான் அடிக்கடி பயந்து போய் கூறி வருவது நினைவிருக்கலாம்).
காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து வகையான வளர்ச்சிப் பணிகளுக்கும் மத்திய அரசு உதவும். காஷ்மீர்மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக மத்திய அரசு எப்போதும் தயாராகவே உள்ளது. எங்கள்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அவற்றை நாங்கள் மூடுவதே இல்லை என்றார் வாஜ்பாய்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 5 பேருக்கு புதியவேலைகளுக்கான அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர்களையும் அப்போது வாஜ்பாய் வழங்கினார்.மேலும் பிரபல காஷ்மீர் கவிஞர் மேஜூர் எழுதிய ஒரு கவிதையை அவர் வாசித்துக் காட்டியபோதுகூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதற்கிடையே பிரதமர் வருகையையொட்டி ஹூரியத் உள்ளிட்ட சில தீவிரவாத இயக்கங்கள்நடத்திய பந்த் காரணமாக ஸ்ரீநகரின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக வாஜ்பாய் வருகையைக் கண்டித்து ஊர்வலம் செல்ல முயன்ற ஜம்மு-காஷ்மீர் விடுதலைஇயக்கத்தின் துணைத் தலைவரான ஜாவித் அகமது மிர் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.