நஷ்டத்தில் மூழ்கியது கோ-ஆப்டெக்ஸ்: காப்பாற்ற மத்திய அரசு முயற்சி
சென்னை:
வண்ணக் கனவுகள் வாங்க கோ-ஆப்டெக்சுக்கு வாருங்கள் என்று தீபாவளி, பொங்கல் தினங்களில் விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம்.
அந்த நிறுவனத்தின் அடையாளச் சின்னமான வண்ணத்துப்பூச்சி தமிழ்நாட்டில் கலர் டிவிக்களில் எல்லாம் வண்ணம் பூசியது ஒரு காலம்.ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்.
தமிழக கைத்தறி, விசைத்தறி உற்பத்திப் பொருள்களின் விற்பனை மையமான கோ-ஆப்டெக்ஸ் பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ. 300 கோடிக்கும் அதிகமான சேலைகள்,வேட்டிகள், பெட்ஷீட் மற்றும் இதர துணிகளை வாங்கி விற்று வருகிறது கோ-ஆப்டெக்ஸ்.
இதன்மூலம் லட்சக்கணக்கான நெசவாளர்களின் வீட்டில் அடுப்பு எரிய உதவி வருகிறது. ஆனால், பிற தனியார் ஜவுளி நிறுவனங்களுக்குஇணையாக விளம்பரமும், போட்டியும் போட முடியாமல் கோ-ஆப்டெக்ஸ் கடந்த சில ஆண்டுகளாக திணறி வருகிறது.
ஆண்டு முழுவதும் ஏதாவது காரணம் சொல்லி தள்ளுபடி விற்பனை நடத்த வேண்டிய நிலையில் கோ-ஆப்டெக்ஸ் உள்ளது. விலைகளைக்குறைத்து விற்றதால் கிட்டத்தட்ட ரூ. 50 கோடிக்கும் மேல் நஷ்டத்தில் மூழ்கிப் போயுள்ளது.
கையில் பணம் இல்லாததால் நெசவாளர்களிடம் இருந்து ஜவுளிகளை வாங்குவதையும் கோ-ஆப்டெக்ஸ் நிறுத்திக் கொண்டுள்ளது.ஏற்கனவே, தமிழக அரசும் அவர்களிடம் இருந்து ஜவுளிகள் வாங்குவதை நிறுத்திக் கொண்டதால் துயரத்தில் மூழ்கியுள்ளநெசவாளர்களுக்கு இது மரண அடியாக விழுந்துள்ளது.
கோ-ஆப்டெக்சின் நிலைமை மிக மோசமாக இருப்பதால் மத்திய ஜவுளித்துறை கவலை அடைந்துள்ளது. ஒரு காலத்தில் வெளிநாடுகளில்கோ-ஆப்டெக்சின் கைத்தறிப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இதன் மூலம் மத்திய ஜவிளித்துறை பல கோடி லாபம்பார்த்தது.
ஆனால், உள்நாட்டு விற்பனையில் கோ-ஆப்டெக்ஸ் பின் தங்கி இப்போது மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் அந்த நிறுவனத்தைதானே எடுத்து நடத்த மத்திய ஜவுளித்துறை முடிவு செய்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தியது. இதில் கோ-ஆப்டெக்ஸை விட்டுக் கொடுக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டுவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து விரைவில் கோ-ஆப்டெக்ஸ் மத்திய ஜவுளித்துறையின் கட்டுப்பாட்டில் போகப் போகிறது.இதன் பின்னராவது இந்த நிறுவனம் மீண்டும் எழுந்து நின்றால் சரி.
-->