வாஜ்பாயுடன் பாக். பிரதமர் டெலிபோனில் பேச்சு
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் மிர்ஜாபருல்லா கான் ஜமாலி இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் இருப்பதாகத்தெரிவித்தார்.
கடந்த வாரம் காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்ட வாஜ்பாய் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பாகிஸ்தானுடன் நட்பு கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள்துளிர்க்கத் தொடங்கின. பாகிஸ்தானும் இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆவலுடன் இருப்பதாகத்தெரிவித்தது.
இம்முயற்சிகளின் முதற்கட்டமாக நேற்று வாஜ்பாயைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசினார் ஜமாலி. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மீண்டும் புதுப்பிப்பதுதொடர்பாக இரு தலைவர்களும் சுமார் 10 நிமிடங்கள் வரை பேசினர்.
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து, கிரிக்கெட் உள்ளிட்டவிளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவற்றை மீண்டும் தொடங்குவது குறித்து வாஜ்பாயும்,ஜமாலியும் விவாதித்தனர்.
இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே விமானப்போக்குவரத்து ரத்து மற்றும் பொருளாதரத் தடை போன்ற கடுமையான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட வேண்டியிருந்ததாக அப்போது ஜமாலியிடம் வாஜ்பாய் தெரிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசிய ஜமாலி, பாகிஸ்தானுக்குவாஜ்பாய் வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். நானும் இந்தியாவுக்கு வருவதற்குஆவலாக உள்ளதாகவும் ஜமாலி தெரிவித்தார். காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்துபேச்சு நடத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுக்கஆரம்பித்தது. பஸ், ரயில், விமானம் என பாகிஸ்தானுடனான அனைத்துப் போக்குவரத்துக்களையும்துண்டித்துக் கொண்டது இந்தியா.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் போர் மேகங்களும் சூழ ஆரம்பித்தன. ஆனால் கடந்த ஆண்டுத்தொடக்கத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் பயணம் மேற்கொண்ட அமெரிக்க, பிரிட்டிஷ்தலைவர்கள் போரைத் தவிர்க்கச் செய்து விட்டனர்.
இதற்குப் பின்னர் இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப் பல முறை கோரிக்கை விடுத்தும் இந்தியா அதைக் கண்டுகொள்ளவில்லை.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும் வரை பேச்சுவார்த்தை என்றபேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா தெளிவாகக் கூறி விட்டது.
இந்நிலையில்தான் கடந்த வாரம் காஷ்மீர் பொதுக் கூட்டத்தில் பேசிய வாஜ்பாய் பாகிஸ்தானுடன்நட்புக் கரம் நீட்ட விரும்புவதாகத் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக வாஜ்பாயுடன் ஜமாலிநேற்று தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதையடுத்து இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தைக்கானமுயற்சிகள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன.
பாக். செல்ல வாஜ்பாய் மறுப்பு:
ஆனால் பாகிஸ்தானுக்கு வருமாறு ஜமாலி விடுத்த அழைப்பை வாஜ்பாய் நிராகரித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு வருமாறு ஜமாலி விடுத்த அழைப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று இன்றுகாலை நடந்த பா.ஜ.க. எம்.பிக்கள் கூட்டத்தில் வாஜ்பாய் தெரிவித்தார்.
ஜமாலியுடன் தொலைபேசியில் பேசியது தொடர்பாக இன்று அவர் நாடாளுமன்றத்தில்உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த முறையில் பதில் தர வேண்டும் என்று அந்நாட்டுவெளியுறவுத் துறை அமைச்சர் மஹ்மூத் கசூரி தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேவிரைவில் பேச்சுக்கள் தொடங்கும் என்று அந்நாட்டு செய்தி அமைச்சர் ஷேக் அகமது ரஷீத்தும்நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் வரவேற்பு:
இதற்கிடையே வாஜ்பாய்-ஜமாலி டெலிபோன் பேச்சை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
"இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் சீரடைவதை யாரும் எதிர்க்கமாட்டார்கள் நாங்களும் எதிர்க்க மாட்டோம். ஆனாலும் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலைகளைபாகிஸ்தான் இன்னும் அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பேச்சு நடத்தஅழைப்பு விடுக்கலாம்" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி இன்றுநிருபர்களிடம் தெரிவித்தார்.