மதுரை பெண் தமிழகத்தில் முதலிடம் பெற்றார்
சென்னை:
தமிழிலேயே தேர்வு எழுதியவர் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.)அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள்.
மதுரையைச் சேர்ந்த ஸ்ரீபிரியா தமிழக மாணவர்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 72வது இடம் அவருக்குக்கிடைத்துள்ளது.
அகில இந்திய அளவில் மொத்தம் 284 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் டெல்லியைச்சேர்ந்தவர்களே அதிக அளவில் தேர்வு பெற்றுள்ளனர்.
இரண்டாவது இடத்தை உத்தரபிரதேசம் பெற்றுள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் அரசு பயிற்சிமையத்தில் பயிற்சி பெற்ற 2 பெண்கள் உள்பட 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த 17 பேரில் 4 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், 4 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவும் தேர்வு பெற்றுள்ளனர்.மீதமுள்ளவர்கள் ஐ.ஆர்.எஸ், ஐ.எப்.எஸ். மற்றும் பிற பதவிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.
தமிழகத்திலிருந்து மொத்தம் 46 பேர் இன்டர்வியூவுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிலிருந்து 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில் மதுரையைச் சேர்ந்த 30 வயதான ஸ்ரீபிரியா ரங்கராஜன், தமிழக மாணவர்களிலேயே முதல் மாணவியாகத் தேர்வுபெற்றுள்ளார். அகில இந்திய அளவில் அவர் 72வது ரேங்க் பெற்றுள்ளார்.
ஸ்ரீபிரியாவின் தந்தை ரங்கராஜன் மற்றும் தாய் சபீதா ஆகிய இருவருமே டாக்டர்கள். ஸ்ரீபிரியாவுக்கு 2 சகோதரிகளும் ஒருஅண்ணனும் உள்ளனர். இவர்தான் வீட்டில் கடைக் குட்டியாவார்.
முதுநிலை சட்டம் (எம்.எல்.) படித்துள்ள ஸ்ரீபிரியாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவருடைய கணவர் லஜபதிராய் வழக்கறிஞராகஉள்ளார். இவர்களுக்கு அகிலன், கயல் ஆகிய 2 குழந்தைகளும் உண்டு.
ஐ.ஏ.எஸ். தேர்வில் விருப்பப்பாடமாக தமிழ் இலக்கியம் மற்றும் சட்டத்தை அவர் தேர்வு செய்திருந்தார்.
தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல்: நாகராஜன், ஸ்வரூப், ஜெயராகவன், பாலகிருஷ்ணன், முரளி, செந்தில்குமார், சுதாகர், மாணிக்கராஜ், வசந்தகுமார், சதீஷ்குமார், கருப்பண்ணசாமி, காளிராஜ் மகேஷ்குமார், ராஜலிங்கம்பாசு, ஜெயசீலன்,சிவசங்கரன் மற்றும் வந்தனா.
-->