பாகிஸ்தானுடன் உடனடி பேச்சு சாத்தியமில்லை: இந்தியா
டெல்லி:
மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என இந்தியா கருத்துத்தெரிவித்துள்ளது.
இதனால் இப்போதைக்கு பேச்சுவார்த்தை துவங்காது என்று தெரிகிறது.
இந்தியாவுடன் பேச்சு தொடங்குவதற்கு ஏதுவாக இரு நாடுகளுக்கும் இடையிலான விமான, ரயில், பஸ் சேவைகளை மீண்டும்தொடங்குவதாகவும், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதாகவும் அந் நாட்டுப்பிரதமர் மிர் ஜபருல்லா கான் ஜமாலி அறிவித்துள்ளார்.
மேலும் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஹாக்கி, கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். அதேநேரத்தில் காஷ்மீர் மக்களின் உரிமைகளை எந்தக் காரணம் கொண்டும் விட்டுத் தர மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, மீண்டும் பேச்சு தொடங்க பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் போதுமானவை அல்ல என இந்தியா கூறியுள்ளது.எல்லை தாண்டிய தீவிரவாதத்தைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாத வரை பேச்சுவார்த்தை என்பது உடனடியாக சாத்தியமில்லை எனஇந்தியா கூறிவிட்டது.
அமெரிக்காவில் பிரிஜேஷ் மிஸ்ரா:
பாகிஸ்தான் உளவுப் பிரிவின் தலைவர் வாஷிங்டன் சென்றுள்ள நிலையில் பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ்மிஸ்ராவும் அமெரிக்கா சென்றுள்ளார்.
காஷாமீரில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா விளக்கம் கோரியுள்ளது. இந்நிலையில் மிஸ்ராவை அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் லண்டனில் ரகசியமாகச் சந்தித்துப் பேச்சுநடத்தினார்.
மேற்கொண்டு விரிவான பேச்சு நடத்த மிஸ்ராவை அவர் அமெரிக்காவுக்கு அழைத்தார். இதைத் தொடர்ந்து மிஸ்ராவும் வாஷிங்டன்சென்றுள்ளார்.
ஆர்மிடேஜ் இன்று பாக். வருகை:
பாகிஸ்தான் உளவுப் பிரிவுத் தலைவரை நேரில் அழைத்து விவரங்கள் சேகரித்த ஆர்மிடேஜ் இன்று இஸ்லாமாத் வருகிறார். அதிபர்புஷ்ஷின் தெற்காசிய பாதுகாப்பு ஆலோசகர் கிரிஸ்டினா ரோக்காவுடன் வரும் அவர் காஷ்மீர், ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் குறித்துராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் மற்றும் பிரதமர் மிர் ஜமாலியுடன் பேச்சு நடத்த உள்ளார்.
இதன் பிறகு அவர் இந்தியா வருகிறார். ஆர்மிடேஜ் இந்தியா வரும்போது பிரிஜேஷ் மிஸ்ராவும் டெல்லி திரும்பி விடுவார்.
அன்னான் வரவேற்பு:
இதற்கிடையே பதற்றத்தைத் தணிக்க மீண்டும் பேச்சு தொடங்கும் முயற்சிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஈடுபட்டுள்ளதற்கு ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அன்னான் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
காத்திருக்கும் 1,400 தீவிரவாதிகள்:
இந் நிலையில் காஷ்மீருக்குள் நுழைய 1.400 தீவிரவாதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் தயாராக இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.இவர்களை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் காத்திருப்பதாக ராஜ்யசபாவில் மத்திய அரசு இன்று தெரிவித்தது.
சின்ஹா மீது பாய்ச்சல்:
இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தொடங்குவதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாகெடுக்க முயல்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை குர்ஷித் கசூரி கூறுகையில்,
காமன்வெல்த் அமைப்பில் பாகிஸ்தான் மீண்டும் நுழைவதைத் தடுக்கும் முயற்சிகளில் சின்ஹா ஈடுபட்டுள்ளார். இதற்காக ஆப்பிரிக்கநாடுகளிடம் அவர் பேச்சு நடத்தி வருகிறார் என்றார்.
பாக் புதிய தூதர் முடிவு?:
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு புதிய தூதராக சிவசங்கர் மேனனை நியமிக்க பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்வருகின்றன.
அவர் அல்லது வங்கதேசத்தில் தூதராக உள்ள மணி திரிபாதி நியமிக்கப்படலாம் எனவும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.