மீண்டும் தமிழகத்தில் லாக்-அப் சாவு: போலீசார் தாக்கி வாலிபர் பலி
சென்னை:
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வட சென்னையில் உள்ள கொடுகையூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் அங்கம்மாள். இவரது மகன் சரவணன். கூலி வேலை பார்த்துவந்தார். இவர் வேலையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ரோந்து சென்ற போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்தனர்.
அவர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரை 6 போலீசார் சேர்ந்து பல மணி நேரம் மிகக்கடுமையாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் உடலெங்கும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி, மயங்கி விழுந்த சரவணனை அவரது வீட்டுவாசலில் வந்து போட்டனர்.
போலீசாரிடம் விவரம் கேட்டபோது, சரவணனை விசாரித்தபோது காயம் பட்டதாகக் கூறிவிட்டுச் சென்றனர்.
இதையடுத்து சரவணனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரது தாயாரும் அக்கம் பக்கத்தினரும் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைபலனின்றி சரவணன் இன்று காலை இறந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உடலை வாங்க மறுத்து சரவணனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல் இன்னும் கீழ்பாக்கம்மருத்துவமனை சவக் கிடங்கில் தான் உள்ளது.
பலியான சரவணனின் தாயார் கூறுகையில், மெட்ராஸ்ல எங்களுக்கு போலீசால பாதுகாப்பே இல்லை. ஏழைகள் என்றால் நாயைக்கொல்வது மாதிரி கொல்கிறார்கள் என்றார் அழுதபடி.
இந்தச் சம்பவத்தால் கொடுங்கையூரில் பரபரப்பு நிலவுகிறது.