ஜி.வி. சாவுக்கு அன்புச்செழியன் காரணமல்ல- பஞ்சு
படத் தயாரிப்பாளர் ஜி.வியின் தற்கொலைக்கு மதுரை கந்து வட்டிக்காரர் அன்புச் செழியன் காரணம் அல்ல என இன்னொரு படத்தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலம் கூறியுள்ளார்.
ஜி.வியிடம் தான் கொடுத்த ரூ. 25 லட்சத்தை உடனே தரச் சொல்லி ஆட்களை வைத்தும் தொலைபேசி மூலமூம் கந்து வட்டிக் கும்பலைச்சேர்ந்த அன்புச் செழியன் மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இப்போது வழக்கில் இருந்து தப்ப போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான மன்னார்குடி பெண் வி.வி.ஐ.பியிடம் அவர்தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
இந் நிலையில் நிருபர்களைச் சந்தித்த பஞ்சு அருணாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியன் தான் ஜி.விக்கு பைனான்ஸ் செய்திருந்தார். அவரிடம் நான் உள்பட பல சினிமா தயாரிப்பாளர்களும்பணம் வாங்கியிருக்கிறோம். அவர் 4 சதவீத வட்டிக்குத் தான் பணம் தந்தார். அநியாய வட்டி எல்லாம் இல்லை. ஜி.விக்கு மூன்றரைவட்டிக்குப் பணம் தந்திருந்தார்.
ஜி.விக்கு இவரை அறிமுகம் செய்து வைத்ததே நான் தான். அதிலும் முக்கால்வாசிப் பணத்தை ஜி.வி. திருப்பித் தந்துவிட்டார். கால்வாசித்தான் பாக்கி. அதை மே அல்லது ஜூன் மாதம் திருப்பித் தருவதாக ஜி.வி. உறுதியளித்தார்.
ஜி.வியிடம் பண விஷயம் எதுவாக இருந்தாலும் என் மூலமாகத் தான் அன்புச்செழியன் பேசி வந்தார். நேரடியாக ஜி.வியிடம் அவர்பேசியதே இல்லை. இதனால் ஜி.வி. தற்கொலைக்கு மதுரை பைனான்சியர் தான் காரணம் என்று செய்திகள் வருவது தவறு.
ஜி.விக்கு பெரும் அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. கடன்களைப் பார்க்கும்போது சொத்து தான் அதிகம். மகாபலிபுரம் நிலம் மட்டும் ரூ. 30கோடி பெரும். தஞ்சாவூர் தியேட்டர்கள் ரூ. 6 கோடி பெறும். சென்னை குட்லக் தியேட்டர் மதிப்பு ரூ. 4 கோடி. ஆழ்வார்பேட்டையில் உள்ளபல மாடிக் கட்டடம் ரூ. 10 கோடி. இது தவிர கொடைக்கானலில் கோடிக்கணக்கிலான சொத்தும் அவருக்கு உண்டு.
அவருக்கு இருந்த கடன் இந்தச் சொத்துக்களைவிடக் குறைவு தான் என்றார் பஞ்சு.
ஆனால், அன்புச்செழியனுக்காக பஞ்சு அருணாச்சலம் திடீரென வக்காலத்து வாங்குவது ஏன் என்று புரியவில்லை. அவருக்கு போயஸ்கார்டனில் இருந்து ஏதாவது நெருக்குதல் வந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- ஜி.வியை மிரட்டிய கந்து வட்டி ரெளடி மன்னார்குடி கும்பலிடம் தஞ்சம்
- மதுரை கந்து வட்டிக் கும்பலின் மிரட்டல் காரணம்?
- நெப்போலியனிடம் உதவி கேட்ட ஜி.வி.!
- மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை