வறண்டது மேட்டூர்: இந்த ஆண்டும் குறுவைப் பயிர் கோவிந்தா?
டெல்லி & மேட்டூர்:
மேட்டூர் அணை வறண்டுவிட்டதால் தஞ்சை, திருச்சி. கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு வரும் ஜூன் மாதம் நீர் திறந்துவிடப்பட வாய்ப்பே இல்லை என்று அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
இதனால் இந்த ஆண்டும் குறுவை நெல் சாகுபடி நடப்பது பெரும் சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
இந் நிலையில் காவிரியில் உடனே தமிழகத்துக்கு உரிய நீரை விட கர்நாடகத்துக்கு உத்தரவிடுமாறு மக்களவையில் தமிழகத்தைச்சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பிரச்சனையை மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் ஐய்யர் கிளப்பினார் அவர் பேசுகையில், தமிழகத்தில்இரண்டாவது முறையாக குறுவைப் பயிர் சாகுபடி சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
இதைத் தவிர்க்க காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும்.காவிரி நடுவர் மன்றத் தலைவர் என்ற முறையில் இதில் பிரதமர் வாஜ்பாய் உடனடியாகத் தலையிட வேண்டும்.
எந்தக் காலத்திலும் நதி நீர் ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் மதித்து செயல்பட்டதே இல்லை. காவிரி டெல்டா தான்இந்தியாவின் அரிசிக் களஞ்சியமாக விளங்கியது. இப்போது அப் பகுதி பாலைவனமாக மாறிவிட்டது. அங்கு விவசாயி கூடஅரிசி இல்லாமல் பட்டினி கிடக்கிறான்.
எனவே உடனே தண்ணீரைத் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஐய்யரை ஆதரித்துப் பேசிய அதிமுக எம்.பியான சரோஜா, காவிரிக் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய்உடனடியாகக் கூட்டி தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார்.
திமுக உறுப்பினர் பழனிமாணிக்கம் பேசுகையில், கடந்த ஆண்டு நிலவிய அதே சூழல் இப்போது மீணடும் தமிழகத்தில்நிலவுகிறது. மீண்டும் விவசாயிகள் பட்டினி கிடக்கின்றனர். இந்த ஆண்டாவது குறுவைப் பயிரை மத்திய அரசு காப்பாற்றித் தரவேண்டும் என்றார்.
குறுவைப் பயிர் கோவிந்தா?
காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்தஆண்டு கர்நாடகம் காவிரியில் நீர் விட மறுத்துவிட்டதால் மேட்டூரும் காய்ந்து, பயிர்களும் கருகின.
இந் நிலையில் இந்த ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணைக்குவந்து கொண்டிருக்கும் நீரின் அளவு வெறும் 91 கன அடிதான். அணையில் 5.95 டி.எம்.சி.தண்ணீர் தான் உள்ளது.
மொத்தக் கொள்ளளவு 93.47 டி.எம்.சியாகும்.
கர்நாடக அணைகளிலும் தற்போது போதுமான நீர் இல்லை என்று கூறப்படுகிறது. கர்நாடக காவிரி டெல்டாப் பகுதிகளில் உள்ள அணைகளில் மொத்தம்12 டிஎம்சி தண்ணீர் தான் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, கோடை மழை ஏதாவது பெய்து காவிரியில் தண்ணீர் வந்தால் தான் டெல்டா விவசாயிகள் குறுவைப் பயிர் சாகுபடி செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications