வாஜ்பாய்க்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
அரசுப் பணத்தில் பத்திரிக்கைகளில் பிரதமர் வாஜ்பாயைப் புகழ்ந்து விளம்பரம் வெளியிட்டதை எதிர்த்து வாஜ்பாய் மற்றும்மத்திய செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு எதிராக, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஹைதர் அலி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 1ம் தேதிபல்வேறு நாளிதழ்களில், வாஜ்பாய் மற்றும் சுஷ்மா சுவராஜின் சாதனைகளை விளக்கி வெளியாகியிருந்த பல்வேறுவிளம்பரங்களை மேற்கோள் காட்டி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார் ஹைதர் அலி.
தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் 1ம் தேதி நாடு முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள விளம்பரத்தில் வாஜ்பாயின் முழு உருவப் படம்வண்ணத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே, வாஜ்பாய் நல்லாட்சி தருகிறார், இந்தியாவை அணு ஆயுத நாடாக மாற்றிசாதனை புரிந்துள்ளார் என்றும், அத்தோடு வாஜ்பாய் செய்த சாதனைகளாக ஒரு பக்கம் முழுவதும் பல விஷயங்கள்பட்டியலிடப்பட்டுள்ளன.
அதில், மத்திய அரசின் சாதனைகள் குறித்தோ, மக்கள் நலன் குறித்தோ அதில் எதுவும் இல்லை. மாறாக, வாஜ்பாய் என்ற தனிமனிதரை விளம்பரப்படுத்தியும், பா.ஜ.க. என்ற அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும்தான் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தவிளம்பரத்தால் மத்திய அரசுக்கோ அல்லது நாட்டுக்கோ எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும், வாஜ்பாய்க்கு ஆதரவாகவும் மக்களைக் கவரும் விதத்திலேயே இந்த விளம்பரம்வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணம், அரசின் பணம் கோடிக்கணக்கில் இந்த விளம்பரத்திற்காகவீணடிக்கப்பட்டுள்ளது.
எனவே இதை ஊழல் தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்து, இந்த விளம்பரங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
மனுவை ஆய்வு செய்த நீதிபதி ஜெயபால், வழக்கை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.