நாளை முதல் அரசு மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் பாடு திண்டாட்டம்
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக நாளை முதல் அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதனால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் பெரிய அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடத்தப்படும். குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை உள்பட சிறிய அறுவை சிகிச்சைகள் ஏதும் நடக்காது.
இந் நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக மருத்துவ விற்பனைப் பிரதிநிதிகளும் (medical representatives) நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் மருந்துக் கடைகளுக்கு மருந்து வினியோகம் பாதிக்கப்படஉள்ளது. மேலும் புதிய ரக மருந்துகள் அறிமுகமாவதும் தடைபடும்.
இதற்கிடையே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்தது. கோவையில் மருத்துவ மாணவர்கள் மொட்டைஅடித்தும், காதில் பூ வைத்தும் நூதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவக் கல்வி இயக்குனரின் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தினர். இவர்கள்அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதே போல மதுரையிலும் திருச்சியும் மாணவர்களும் மாணவிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்குஆதரவாக அரசு மருத்த்துவமனை மருத்துவர்களும் அரசு ஊழியர் கூட்டமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு புதிய எச்சரிக்கை:
இதற்கிடையே மருத்துவ மாணவர்கள் வரும் 15ம் தேதிக்குள் வகுப்புகளுக்குத் திரும்பாவிட்டால் அவர்களது இன்டர்னல் மார்க், வருகைச்சான்றிதழ் ஆகியவற்றை மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப மாட்டோம் என அரசு எச்சரித்துள்ளது.
இதனால் மாணவர்களுக்கு தேர்வெழுத நுழைவுச்சீட்டு கிடைக்காத சூழல் ஏற்படும்.
அதே நேரத்தில் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்று கூறியுள்ளது.